பதிவு செய்த நாள்
11 டிச2011
00:10
தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், பிற மாவட்டங்களில் உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளதாலும், தக்காளி விலை தொடர்ந்து சரிவடையத் துவங்கியுள்ளது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய பகுதியில் உள்ள மேட்டு பாங்கான நில அமைப்பில் அதிக அளவில் தக்காளி பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் விவசாயிகள் சுழற்சி முறையில் தக்காளி பயிர் செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தியாகும் தக்காளியை சந்தைப்படுத்தும் வகையில் பென்னாகரம், பாலக்கோடு ஆகிய ஊர்களில் தக்காளிக்கு பிரத்தியேக சந்தை செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் தக்காளி நேரடியாக வியாபாரிகள் வாங்கி செல்வதால், தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் விவசாயிகள் இங்கு தக்காளியை கொள்முதல் செய்ய வருகின்றனர். இங்கிருந்து கேரள மாநிலத்துக்கும், அதிகளவில் தக்காளி விற்பனைக்கு செல்கிறது.
நாமக்கல், சேலம், பவானி, மேட்டூர், சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை, மதுரை, நெல்லை, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் இங்கிருந்து தினம் தக்காளி விற்பனைக்கு செல்கிறது. கடந்த மாதம் தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கன மழை பெய்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தென் மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனல், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு ஆகிய தாலுகாவில், மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதனால், வழக்கமான தக்காளி உற்பத்தி இருந்து வந்தது. தென் மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு இங்கிருந்து தக்காளி தேவை பூர்த்தி செய்யப்பட்டதால், கடந்த வாரம் வரையில் பென்னாகரம், பாலக்கோடு தக்காளி சந்தையில், 18 கிலோ தக்காளி கூடை, 180 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, சேலம், மேச்சேரி, மேட்டூர், பவானி, நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வரத்துவங்கியது. மேலும், கேரள மாநிலத்தில் பெரியாறு பிரச்னை தொடர்பாக லாரி போக்குவரத்து குறைந்திருப்பதால், கேரளாவுக்கு செல்லும் தக்காளியும் உள்ளூர் சந்தையை நம்பியுள்ளது. சந்தையில் வெளி மாவட்ட, வெளி மாநில கொள்முதல் குறைந்திருப்பதை தொடர்ந்து உள்ளூர் வியாபாரிகளை மட்டும் நம்பி தக்காளி விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது.
தட்டுப்பாடு இல்லாமை மற்றும் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை சரிவடைய துவக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, பாலக்கோடு தக்காளி சந்தையில், 18 கிலோ தக்காளி கூடையை, 100 ரூபாய் முதல், 130 ரூபாய் வரையில் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
வெளி மாவட்டங்களில் உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வரும் நாட்களில் அதிகம் வரும் என்பதால், தொடர்ந்து தர்மபுரி மாவட்ட தக்காளி சந்தைகளில் விலை வீழ்ச்சியடையும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|