பதிவு செய்த நாள்
11 டிச2011
00:11
புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 2 லட்சத்து 52 ஆயிரத்து 544 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி வருவாயை விட, 16.8 சதவீதம் (2 லட்சத்து 16 ஆயிரத்து 164 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் (சி.பீ.இ.சி.,)வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 லட்சம் கோடி ரூபாய் : மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் மறைமுக வரி வசூல் வாயிலாக, 4 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், இதுவரையிலுமாக, மறைமுக வரி வசூல் நல்ல அளவில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நடப்பாண்டு, ஜூன் மாதத்தில், மத்திய அரசு, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை வெகுவாகக் குறைத்தது. இவ்வகையில், மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையிலும், மறைமுக வரி வசூல், நல்ல அளவில் உயர்ந்துள்ளது என, சி.பீ.இ.சி., அமைப்பின் தலைவர் எஸ்.கே.கோயல் தெரிவித்தார்.
மறைமுக வரி பிரிவின் கீழ், உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இம்மூன்று பிரிவுகளில், சென்ற நவம்பர் மாதத்தில், உற்பத்தி வரி தவிர, சுங்க வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
எனவே, நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் இலக்கை சுலபமாக எட்டி விடலாம் என கோயல் மேலும் கூறினார்.
நடப்பு நிதியாண்டிற்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த மறைமுக வரி வசூல் இலக்கில், நவம்பர் மாதம் வரையிலுமாக, 63.04 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 62.88 சதவீதம் என்றளவில் இருந்தது. பொதுவாக, டிசம்பர் முதல் மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில் தான், மிக அதிகளவில் மறைமுக வரி வருவாய் திரட்டப்படும். எனவே, நடப்பு நிதியாண்டிற்கான, மறைமுக வரி வசூல் எட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க வரி : சென்ற நவம்பர் மாதத்தில், சுங்க வரி வசூல், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி வசூலை விட, 4.7 சதவீதம் அதிகரித்து அதாவது, 11 ஆயிரத்து 546 கோடி ரூபாயிலிருந்து, 12 ஆயிரத்து 89 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சேவை வரி வசூல், 41.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,102 கோடி ரூபாயிலிருந்து, 7,232 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், உற்பத்தி வரி, 6.5 சதவீதம் குறைந்து, 12 ஆயிரத்து 574 கோடி ரூபாயிலிருந்து, 11 ஆயிரத்து 761 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. ஒட்டு மொத்த அளவில், சென்ற நவம்பர் மாததத்தில் மட்டும், மறைமுக வரி வசூல், கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 6.37 சதவீதம் உயர்ந்து, 29 ஆயிரத்து 222 கோடி ரூபாயிலிருந்து, 31 ஆயிரத்து 82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எட்டு மாத காலம் : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த மறைமுக வரி வசூலில், சுங்க வரி வசூல், 15.2 சதவீதம் வளர்ச்சி கண்டு அதாவது, 86 ஆயிரத்து 883 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 62 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், உற்பத்தி வரி, 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 86 ஆயிரத்து 379 கோடி ரூபாயிலிருந்து, 94 ஆயிரத்து 441 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சேவை வரி வசூல், 35 சதவீதம் உயர்ந்து, 42 ஆயிரத்து 901 கோடி ரூபாயிலிருந்து, 58 ஆயிரத்து 41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இவ்வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
நேரடி வரி வசூல் : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் நேரடி வரி வசூலும், 8.63 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 16 ஆயிரத்து 628 கோடி ரூபாயிலிருந்து, 2 லட்சத்து 35 ஆயிரத்து 333 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், அதிகளவில் முன் கூட்டிய வரி செலுத்தியவர்களுக்கு, 68 ஆயிரத்து 669 கோடி ரூபாய் திரும்ப அளித்ததால், நிகர நேரடி வசூல் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் வாயிலாக, மத்திய அரசு, 5 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் வகையில், இலக்கை உயர்த்தி நிர்ணயித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் நேரடி வரி வசூல் இலக்கு எட்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.நேரடி வரியின் கீழ், வருமான வரி, நிறுவன வரி போன்றவை இடம் பெறுகின்றன. நேரடி வரியை மற்றவர்கள் மீது சுமத்த முடியாது. மறைமுக வரியை மற்றவர்கள் மீது சுமத்த முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|