பதிவு செய்த நாள்
12 டிச2011
00:08
புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதம், நாட்டின் முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 10 சதவீதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டு, இதே காலத்தில், 19.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. வேளாண் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவது குறைந்துள்ளதால், வங்கிகள் வழங்கிய கடன், மிகச் சிறிய அளவிற்கே வளர்ச்சிக் கண்டுள்ளது.
சென்ற அக்டோபரில், முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிகள், 12.48 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 11.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில், வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான கடன், 7.1 சதவீத வளர்ச்சிக் கண்டு, 4.35 லட்சம் கோடியாக உள்ளது. இது, சென்றாண்டு அக்டோபர் மாதம், 20.4 சதவீதம் வளர்ச்சிக் கண்டிருந்தது.
சென்ற அக்டோபரில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 17.4 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 4.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்றாண்டு இதே காலத்தில், 20 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.சென்ற அக்டோபர் மாதம், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 13.3 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சிக் கண்டு, 24 ஆயிரத்து 601 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இத்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன், 50 சதவீதம் வளர்ச்சியைக் கண்டிருந்தது.வீட்டு வசதித் துறைக்கு, வங்கிகள் வழங்கிய கடன், 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டு 2.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இத்துறை, கடந்தாண்டு அக்டோபர் மாதம், 9.3 சதவீத வளர்ச்சியைக் கண்டிருந்தது.சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான வங்கிகளின் கடன், சென்ற அக்டோபரில், 27.7 சதவீதம் வளர்ச்சிக் கண்டிருந்தது.முக்கியத் துறைகளில், வேளாண்துறை மற்றும் நலிந்த பிரிவினருக்கு, முதன்மை வட்டி விகிதத்தை விட, குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதர துறைகளுக்கு இத்தகைய வட்டி மானியம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|