பதிவு செய்த நாள்
12 டிச2011
00:11
மும்பை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அமெரிக்காவில், இந்திய தங்க ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கடந்த ஓராண்டில், தங்கம் விலை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. கச்சா வைரம் விலை 20-30 சதவீதமாகவும், பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் விலை 10-15 சதவீதமும் அதிகரித்துள்ளது. தங்க ஆபரணங்கள், வைரங்கள் உள்ளிட்ட நவரத்தினக்கற்களின் விலை உயர்ந்துள்ளதால், கடந்த ஓராண்டாக, இவ்வகை பொருட்களின் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இத்துறை, 20-25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், இந்தியாவின் தங்க ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் ஏற்றுமதி 28 சதவீதம் உயர்ந்து 58 ஆயிரத்து 668 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி இதை விட அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த தங்க ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இந்நாட்டிற்கான தங்க ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், அளவின் அடிப்படையில், சென்ற ஆண்டு இதே மாதத்தை விட குறைந்துள்ளது.சீனாவிலும் தங்க ஆபரணங்களுக்கான தேவை உயர்ந்துள்ளது. இதனால் நடப்பு காலண்டர் ஆண்டில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான தேவை 6 சதவீதம் உயர்ந்து 1,054 டன்னாக அதிகரித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், தங்க ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் துறையின் லாப வரம்பு உயர்ந்துள்ளது. இத்துறை, இறக்குமதி செய்யும் மொத்த வைரங்களில் 80 சதவீதம் கச்சா வைரங்களாகும். இந்த வைரங்கள், பட்டை தீட்டப்பட்டு, மதிப்பு மிகுந்த வைரக் கற்களாகவும், ஆபரணங்களாகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|