பதிவு செய்த நாள்
12 டிச2011
00:12
கொச்சி: சாதகமான பருவ நிலை மற்றும் விவசாயிகளின் கடுமையான உழைப்பால், சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் ரப்பர் உற்பத்தி, 94 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4.3 சதவீதம் (90 ஆயிரத்து 500 டன்) அதிகம் என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் கார் விற்பனை சரிவடைந்திருந்தது. இருப்பினும், நவம்பர் மாதத்தில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், இயற்கை ரப்பருக்கான தேவை அதிகரித்துள்ளது.
ரப்பர் சாகுபடிஒரு கிலோ ரப்பர் விலை, 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாவதால், இதில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதிகளவில் ரப்பர் சாகுபடியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்ற நவம்பர் மாதத்தில், ரப்பர் பயன்பாடு, 82 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பயன்பாட்டை விட, 5.1 சதவீதம் (78 ஆயிரத்து 10 டன்) அதிகமாகும். மேலும், நவம்பர் மாதத்தில், உற்பத்தி மற்றும் பயன்பாடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் குளிர் காலம் என்பதால், பகலில் நல்ல அளவில் சூரிய ஒளியும் கிடைக்கும். இதனால், ரப்பர் பால் வடிப்பு அதிகரிக்கும். மேலும், வடகிழக்கு பருவக் காற்று வீசுவதால், மண்ணின் ஈரப்பதமும் ரப்பர் உற்பத்திக்கு ஏதுவானதாக இருக்கும்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், 5 லட்சத்து 75 ஆயிரத்து 100 டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4.9 சதவீதம் (5 லட்சத்து 48 ஆயிரத்து 150 டன்) அதிகமாகும்.
ரப்பர் பயன்பாடு
இதே காலத்தில், ரப்பர் பயன்பாடு, 0.7 சதவீதம் வளர்ச்சியடைந்து, 6 லட்சத்து 28 ஆயிரத்து 240 டன்னிலிருந்து, 6 லட்சத்து 32 ஆயிரத்து 615 டன்னாக உயர்ந்துள்ளது.
சென்ற நவம்பர் மாதத்தில், ரப்பர் இறக்குமதி சற்று அதிகரித்திருந்தாலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், குறைந்த அளவிலேயே ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில், 15 ஆயிரத்து 69 டன் என்ற அளவில் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 14 ஆயிரத்து 413 டன் என்றளவில் இருந்தது.
அதேசமயம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், தற்காலிக புள்ளி விவரத்தின் படி, ரப்பர் இறக்குமதி, 1 லட்சத்து 11 ஆயிரத்து 899 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 658 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
ஏற்றுமதி
நாட்டின் ரப்பர் ஏற்றுமதியும் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற நவம்பர் மாதத்தில், 528 டன் ரப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 60 டன்னாக இருந்தது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், ரப்பர் ஏற்றுமதி, 4,798 டன் என்றளவிலிருந்து, 20 ஆயிரத்து 784 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம் ரப்பர் கையிருப்பு, கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 728 டன்னாக இருந்தது. இது, நடப்பாண்டு நவம்பரில், தற்காலிக புள்ளி விவரத்தின் படி, 2 லட்சத்து 55 ஆயிரம் டன்னாகக் குறைந்துள்ளது.
கையிருப்பு இதுகுறித்து, கொச்சி ரப்பர் வர்த்தகர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் என்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் ரப்பருக்கான தேவையும் உயர்ந்துள்ளது. சர்வதேச விலையுடன் ஒப்பிடும் போது, உள்நாட்டில் இயற்கை ரப்பர் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் இதன் விலை மேலும் உயரும் என்ற நம்பிக்கையில் கையிருப்பில் வைத்துள்ளனர்' என்றார்.இந்நிலையில், ரூபாய்க்கு எதிரான டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு செலாவணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் ரப்பரின் விலை மேலும் அதிகரிக்கிறது. இதனாலும், பல விவசாயிகள் உள்நாட்டில் ரப்பர் விலை உயரும் என கையிருப்பில் உள்ள ரப்பரை விற்பனை செய்யாமல் வைத்துள்ளனர் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|