பதிவு செய்த நாள்
13 டிச2011
00:24

சென்னை: சென்னையைச் சேர்ந்த, ரானே குழுமத்தின் விற்றுமுதல் தற்போது, 2,200 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர், எஸ். லட்சுமணன் தெரிவித்தார்.
ரானே குழுமம், அதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில், "ரானேவின் வெற்றி வரலாறு' என்ற ஆங்கிலப் புத்தகத்தை, சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவன தலைவர் சுரேஷ் கிருஷ்ணா வெளியிட, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை தலைவர் முத்துராமன் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், லட்சுமணன் பேசியதாவது:
நிறுவனம், கடந்த 75 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான ஸ்டியரிங், சஸ்பென்ஷன்கள், வால்வுகள், சீட் பெல்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பல்வேறு உதிரிபாகங்களைத் தயாரித்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 15 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மொத்த உதிரிபாகங்கள் விற்பனையில், 40 சதவீதம் வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. மேலும் பல முக்கிய உதிரிபாகங்கள், இதர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், சில்லறை விற்பனை சந்தைக்கும் அளிக்கப்படுகின்றன.
ரானே குழுமத்தின் ஆண்டு விற்றுமுதல் தற்போது, 2,200 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை இரண்டு மடங்காக உயர்த்தவும், நிறுவனத்தின் ஏற்றுமதியை, 20-25 சதவீதம் என்றளவில் அதிகரிக்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, லட்சுமணன் பேசினார்.
முத்துராமன் பேசும்போது, "ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அதில் பணிபுரியும் ஊழியர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தேவையான, அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்ய வேண்டும். இதற்கு, ரானே குழுமம் முன் உதாரணமாகத் திகழ்கிறது' என்றார்.
சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது:ரானே குழும நிறுவனங்கள், மோட்டார் வாகனத் துறைக்கு தேவையான பல்வேறு பாகங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிறுவனத்தின் தரமான தயாரிப்புகள் உள்நாட்டில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்றுமுதலும், பணியாளர்கள் எண்ணிக்கையும், பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, நிர்வாகம் மட்டுமின்றி, இதன் பணியாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது. இவ்வாறு, சுரேஷ் கிருஷ்ணா பேசினார்.இந்நிகழ்ச்சியில், ரானே குழுமத்தின் தலைவர், எல்.கணேஷ், ரானே டி.ஆர். டபிள்யூ., ஸ்டியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஹரிஷ் லட்சுமணன், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செயல் துணை தலைவர், சேசஷாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|