பதிவு செய்த நாள்
14 டிச2011
10:26
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்திலேயே இந்திய ரூபாயின் மதிப்பு 52 பைசா சரிவடைந்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.53.74 ஆக உள்ளது. டிசம்பர் 16ம் தேதியன்று ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட் குறித்த அரையாண்டு கொள்கையை வெளியிட உள்ள நிலையில் ரூபாயின் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் அன்னிய நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் குறையும். இதனால் இந்த நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருகிறது. இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனையடுத்து வங்கிகளும், இறக்குமதியாளர்களும் டாலர்களை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இதனால் டாலருக்கான தேவைப்பாடு மிகவும் உயர்ந்து வருகிறது. அதேசமயம் டாலர் வரத்து குறைந்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் மத்திய அரசின் மானியச்சுமை மேலும் ரூ.1 லட்சம் கோடி அதிகரிக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் அக்டோபர் மாதத்தில் கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகமும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை மட்டும் 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக ஆசிய நாடுகளின், கரன்சிகளில் இந்திய ரூபாயின் வெளிமதிப்பில்தான் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|