பதிவு செய்த நாள்
19 டிச2011
13:24
ஈரோடு : பொங்கல் பண்டிகைக்காக, வெல்லம் உற்பத்தியை ஆலைகள் துவக்கியுள்ளன. சென்ற, தி.மு.க., ஆட்சியில், "பொங்கல் பை'க்காக கொள்முதல் செய்யப்பட்டது போல், நடப்பாண்டு இல்லாததால், வெல்லம் உற்பத்தியாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.ஈரோடு மாவட்ட விவசாயிகள் மஞ்சள், நெல்லுக்கு அடுத்த படியாக, கரும்பு பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாவட்டத்தில் அறச்சலூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, கவுந்தப்பாடி, காங்கேயம், வெள்ளகோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 6,000 எக்டருக்கும் அதிகமான விவசாய நிலத்தில், கரும்பு பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்புகள், பெரிய அளவிலான சர்க்கரை ஆலைகள் மற்றும் கூலி அடிப்படையில், வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தவிர, சுயமாக ஆலைகள் வைத்தும், வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆணடும் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, நவம்பர் மாத இறுதியில் இருந்தே, வெல்லம் உற்பத்தி துவங்கி விடுகிறது. வெல்லம் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள், இரவு பகலாக வெல்லத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது, மார்க்கெட்டில், 30 கிலோ எடைகொண்ட வெல்லம், மூன்றாம் தரம், 330 முதல் 500 ரூபாய் வரை, இரண்டாம் தரம், 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை, முதல் தரம், 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்றாண்டு, தி.மு.க., அரசு, "பொங்கல்' பண்டிகைக்கு, இலவசமாக ரேஷன் மூலம், "பொங்கல் பை' வழங்கியது. காஞ்சிகோவில் வெல்லம் ஆலை உரிமையாளர், சுப்பிரமணியம் கூறியதாவது: ஒரு டன் கரும்பு, 1,400 ரூபாய்க்கு வாங்குகிறோம். வெல்லம் உற்பத்தி செய்ய, 3,500 ரூபாய் செலவாகிறது. ஒரு டன் கரும்பில், 90 முதல், 120 கிலோ வெல்லம் கிடைக்கும். 30 கிலோ மூட்டை, 250 ரூபாய் முதல், முதல் தரம், 750 ரூபாய் வரை விலை போகிறது. நடப்பாண்டு கரும்பு விளைச்சல், 15 சதவீதம் குறைந்துள்ளது. தொடர் மின் வெட்டு, கூலியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவை இருந்த போதும், வெல்லம் விலையேறவில்லை என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|