பதிவு செய்த நாள்
20 டிச2011
00:59
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கில், பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலைப்பாட்டாலும், பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.
மூடிஸ் நிறுவனம், சென்ற வெள்ளியன்று பெல்ஜியம் நாட்டின் கடன் தரக் குறியீட்டை குறைத்தது. இதனால், நேற்று இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, மதியத்திற்கு பிறகு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம், அதிக பின்னடைவிலிருந்து, சற்று முன்னேற்றம் கண்டது.
இருப்பினும், தற்காலிக புள்ளி விவரத்தின் படி, சென்ற வெள்ளிக் கிழமை, அன்னிய நிதி நிறுவனங்கள், 220 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 112.01 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு, 15,379.34 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 15,440.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,190.74 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 38.50 புள்ளிகள் குறைந்து, 4,613.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,623.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,555.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|