பதிவு செய்த நாள்
21 டிச2011
09:38
சேலம்:கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த நெல் வரத்தில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, அரிசி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.தமிழகத்தின் அரிசி உற்பத்திக்குத் தேவையான நெல்லில், 40 சதவீதம் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை நம்பியே உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவமழை தாமதம் காரணமாக தற்போது தான் அறுவடை நடந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்துக்கான நெல்வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை.அத்துடன் அம்மாநிலத்தில், "லெவி' தொடர்ந்து அமலில் உள்ளதால், வியாபாரிகள் நெல்லைக் கொண்டு வருவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, நெல் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு, நெல் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. சமீபத்தில் தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், எதிர்பார்த்த அளவு நெல் விளைச்சல் இல்லை.தமிழக அரசு பொது வினியோக திட்டத்துக்காக அதிக அளவு நெல்லை, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விடுவதால், வெளி மார்க்கெட்டில் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அரசின் நெல் கொள்முதல் விலை கிலோவுக்கு, 10.50 ரூபாயில் இருந்து, 11.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு, அரிசி விலையில் எதிரொலித்துள்ளது.அரசின் கொள்முதல் விலை அதிகரிப்பையடுத்து, வெளி மார்க்கெட்டில் நெல் விலையில் குவிண்டாலுக்கு, 250 ரூபாய் வரை அதிகரித்து, குவிண்டால் 1,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி அரிசி விலை:உயர் ரக வெள்ளை பொன்னி கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 41 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 37 ரூபாய்க்கு விற்றது, 39 ரூபாய்க்கும், பாபத்லால் பொன்னி (பி.பி.டி.,) 32 ரூபாய்க்கு விற்றது, 34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ராஜபோகம் கர்நாடகா டீலக்ஸ் பொன்னி கிலோ, 29.50 ரூபாய்க்கு விற்றது, 32 ரூபாய்க்கும், டீலக்ஸ் பொன்னி, 23 ரூபாய்க்கு விற்றது, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்பை-16 கிலோ, 22 ரூபாய்க்கு விற்றது, 23 ரூபாய்க்கும், ஏ.டி.டி.,-36 கிலோ, 21 ரூபாய்க்கு விற்றது, 22 ரூபாய்க்கும், ஏ.டி.டி.,-43 டீலக்ஸ் ரகம், 23 ரூபாய்க்கு விற்றது, 24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.நேற்று, உயர்ரக அரசியான வெள்ளை பொன்னி கிலோ, 41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அரிசி விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|