பதிவு செய்த நாள்
22 டிச2011
00:07
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மூலப்பொருட்களின் விலை உயர்வால், இந்திய டயர் தயாரிப்பு நிறுவனங்களின் லாபம் சரிவடைந்து வருகிறது. இயற்கை ரப்பரின் விலை 15 சதவீதம் குறைந்துள்ளபோதிலும், டயர் தயாரிப்பாளர்களின் செயல்பாட்டு லாபம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கு, மின்சாரம் போன்ற இதர மூலப்பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாகும்.இதுகுறித்து அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் (இந்திய செயல்பாடு) தலைமை அதிகாரி சத்தீஷ் சர்மா கூறியதாவது:டயர் தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த செலவினத்தில், மின்சாரத்திற்கான செலவு 50-60 சதவீத அளவிற்குஉயர்ந்துள்ளது. இது தவிர, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவால், இறக்குமதி செலவினமும் அதிகரித்துள்ளது.
டயருக்கான தேவை
டயருக்கான தேவைப்பாடும் சிறப்பான அளவில் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், டயர் தயாரிப்பு நிறுவனங்கள், முழு அளவு உற்பத்தி திறனுடன் இயங்கி வருவதால், கூடுதல் செலவு பிடிக்கிறது. இத்தகைய காரணங்களால், லாபம் 16 சதவீதத்திலிருந்து, 7 சதவீதமாக குறைந்து போயுள்ளது. சர்வதேச சந்தையில், நிறுவனங்கள் ஒரே முறையாக, டயர்களின் விலையை 8 முதல் 10 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளன. இந்த நடைமுறை இந்தியாவில் சாத்தியமற்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.சென்ற ஏப்ரல் மாதத்தில், இயற்கை ரப்பரின் விலை கிலோ ஒன்றுக்கு மிக அதிகளவாக 240 ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.இது நடப்பு சந்தையில் 200 ரூபாயாக உள்ளது. மேலும், முன்பேர வர்த்தகத்திலும், ஜனவரி மாதத்திற்கான இதன் விலை, 0.5 சதவீதம் குறைந்து 203.25 ரூபாயாக உள்ளது.ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,சென்ற நவம்பர் மாதத்தில், இந்தியாவின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 4.6 சதவீதம் அதிகரித்து, 15 ஆயிரத்து 069 டன்னாக உள்ளது. வெளிநாடுகளில் இயற்கை ரப்பர் விலை மிகவும் சரிவடைந்துள்ளது.
இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி இந்திய டயர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் ரப்பரை இறக்குமதி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பயன்பாடு
சென்ற நவம்பரில், உள்நாட்டில், இயற்கை ரப்பர் உற்பத்தியும் 4.3 சதவீதம் அதிகரித்து, 94 ஆயிரத்து 400 டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், இதன் ஒட்டு மொத்த பயன்பாடு, 82 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 78 ஆயிரத்து 010 டன்னாக இருந்தது.ரப்பரின் விலை 240 ரூபாய் என்ற அதிக பட்ச விலையிலிருந்து, தற்போது 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது, மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரப்பரின் விலை, இரண்டரை மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு கிலோ ரப்பர் 78 ரூபாயிலிருந்து, 240 ரூபாய் வரைஅதிகரித்துள்ளது.இயற்கை ரப்பரின் விலை குறைவால் டயர் தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு, நடப்பாண்டு ஜனவரி- மார்ச் காலாண்டில், ஓரளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. இது தவிர, செயற்கை ரப்பர் போன்ற இதர மூலப்பொருட்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து காணப்பட்டது என, சியட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரஸ் சவுத்ரி தெரிவித்தார்.
உற்பத்தி திறன்
டயர் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவற்றின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையில், 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன.
இதனையடுத்து, உள்நாட்டில் டயர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன், 47 சதவீதம் அதிகரிக்கும். அதாவது, 2009-10ம் நிதியாண்டில், நிறுவனங்கள், 12.20 கோடி டயர்களை உற்பத்தி செய்திருந்தன. இது, வரும் 2012-13ம் நிதியாண்டில், 18 கோடி டயர்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில், மின்சாரம் உள்ளிட்ட ஒரு சில மூலப் பொருட்களின் விலை உயர்வால், நடப்பு நிதியாண்டில், டயர் நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|