பதிவு செய்த நாள்
30 டிச2011
00:46
சென்னை:இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில், தங்க நகைகளை விட, வைர நகைகளின் விற்பனை அதிகரிக்கும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதே சமயம், தங்க நகைகளுக்கான மவுசு குறையும் என்பதால், வரும் 2013ம் ஆண்டு முதல் அதன் விலை குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் 845 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 695 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அவர்களின் செலவழிப்பு வருவாய் உயர்ந்துள்ளதாலும், தங்க நகைகளை விட வைர நகைகளுக்கான தேவை பெருகும் என, ஆய்வு நிறுவனமான பீ.எம்.ஓ., கேப்பிடல் மார்க்கெட்ஸ் தெரிவித்துள்ளது.விலை:சர்வதேச பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள போதிலும், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், வைரங்கள் விற்பனை 50 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், வைர நகைகளின் விலையும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
தங்க நகைகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதால், நடுத்தர வருவாய் பிரிவினர், தங்கத்திற்கு பதிலாக வைர நகைகளை வாங்கத் துவடங்கியுள்ளனர். இதனால், கடந்த ஆறு மாதங்களில் வைர விற்பனை, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச அளவில், வைரங்களின் பயன்பாட்டில், இந்தியா, சீனா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு 8 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, வரும் 2015ல், 40 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வைரங்களின் தேவைக்கேற்ப, உற்பத்தி அதிகரிக்காததாலும், அதன் விலை உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு சர்வதேச அளவில், 10 லட்சம் கேரட் என்ற அளவில் வைரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.பட்டை தீட்டப்படாத, கச்சா வைரங்கள் விலை, வரும் ஆண்டில், 9 சதவீதம் உயர்ந்து, காரட் 145 டாலராக உயரும்.
இது, 2013ல், 1.4 சதவீதம், 2014ல் 4.8 சதவீதம், 2015ல் 2.6 சதவீதம் மற்றும் 2016ல் 3.2 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, சர்வதேச அளவில் 7,360 கோடி டாலர் என்ற அளவில் இருந்த வைர நகைகளின் விற்பனை, வரும் 2015ம் ஆண்டு 10 ஆயிரம் கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராண்டட் வைரங்கள்:இந்தியாவில், கடந்த ஆறு மாத காலத்தில், பிராண்டட் வைர நகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. டாட்டா குழுமத்தின் தனிஷ்க் பிராண்டு வைர நகைகளின் விற்பனை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், கில்லி பிராண்டு வைர நகைகளின் விற்பனை 40-50 சதவீதம் உயர்ந்துள்ளது.பழைய தங்க நகைகளுக்கு, சந்தையில் விலை குறைவாகவே கிடைக்கிறது. ஆனால், பழைய வைர நகைகளில் 85 சதவீத தொகை கிடைக்கிறது. இதன் காரணமாகவும், வைர நகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் தங்கம் விலை இரு மடங்காக அதிகரித்து, தற்போது ஒருவித தேக்க நிலையை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார மந் தநிலை, பங்குச் சந்தை சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில், இந்த நிலை மாறும் போது, தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி: சர்வதேச சந்தையில், கடந்த 2008ம் ஆண்டு, ஒரு கிராம் தங்கம் 27 டாலராக இருந்தது. இது, 2009ம் ஆண்டு 36 டாலராகவும், 2010ம் ஆண்டு 45 டாலர் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. இது, நடப்பாண்டு செப்டம்பர் 6ம் தேதி அதிகபட்சமாக 53.50 டாலர் என்ற சாதனை அளவை எட்டியது.இந்தியாவில், சென்ற ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, 20 ஆயிரத்து 550 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கம் (24 கேரட்), நடப்பு டிசம்பர் மாதம் 27ம் தேதி 27 ஆயிரத்து 645 ரூபாயாக உயர்ந்துள்ளது.தங்கத்தின் வளர்ச்சி ஒரு நிலையை எட்டி விட்டதையடுத்து, இனி வைரங்கள் மற்றும் வைர நகைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும் என, இத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|