பதிவு செய்த நாள்
30 டிச2011
00:47
நடப்பாண்டின் பங்கு வர்த்தகம் இன்றுடன் முடிவடைகிறது. இது, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடந்த 14 ஆண்டுகளில் சந்தித்த இரண்டாவது மோசமான ஆண்டாக அமைந்து விட்டது. கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டில் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியால், அவர்களின் முதலீட்டில், 19 லட்சத்து 11 ஆயிரத்து 122 கோடி ரூபாய், மாயமாக மறைந்து விட்டது.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியால், சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்தியாவில், 1.97 கோடி பேர், பங்கு முதலீட்டிற்கு அத்தியாவசியமான "டீமேட்' கணக்கு வைத்துள்ளனர்.
பங்குச் சந்தை சரிவால், சராசரியாக ஒரு முதலீட்டாளருக்கு 9.70 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களைப் பொருத்தவரை, நடப்பு டிசம்பர் 28ம் தேதி நிலவரப்படி, அவற்றின் சந்தை மூலதனம், 26.2 சதவீதம் சரிவடைந்து 53 லட்சத்து 88 ஆயிரத்து 118 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, இந்த வீழ்ச்சி 56.7 சதவீதம் (31 லட்சத்து 15 ஆயிரத்து 15 கோடி ரூபாய்) என்ற அளவிலும், முதலீட்டாளர்களின் மொத்த இழப்பு 40 லட்சத்து 75 ஆயிரத்து 321 கோடி ரூபாயாகவும் இருந்தது.
நடப்பு ஆண்டில், அதிக அளவில் சந்தை மூலதனத்தை இழந்த நிறுவனங்களுள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எம்.எம்.டி.சி, எல் அண்டு டி, ஓ.என்.ஜி.சி, பீ.எச்.இ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும், பங்கு முதலீட்டாளர்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.சர்வதேச பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால், நடப்பு ஆண்டில், சென்ற 28ம் தேதி நிலவரப்படி, முதலீட்டாளர்கள் 6 லட்சம் கோடி டாலர் அளவிற்கு பணத்தை இழந்துள்ளனர். உலகளவில், இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. நடப்பாண்டில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' 23 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வரும் மாதங்களில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், வரும் 2012ம் ஆண்டு, ஜுலைக்குப் பிறகு தான் பங்குச் சந்தை புத்துயிர் பெறும் என்றும், அதுவரை இடர்பாடு தொடர வாய்ப்புள்ளதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லுமுல்லு நிறுவனங்களுக்கு "செபி' தடை:பங்குச் சந்தையில், பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளன்று, தில்லுமுல்லு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 7 நிறுவனங்கள் மீது "செபி' நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, தக்ஷீல் சொல்யூஷன்ஸ், ஆர்.டீ.பி.ரசயான்ஸ், ஒன்லைப் கேபிட்டல் அட்வைசர்ஸ்,புரூக்ஸ் லேப்ஸ், பி.ஜி.எலக்ட்ரோபிளாஸ்ட், டிஜாரியா பாலிபைப்ஸ்,பாரதிய குளோபல் இன்போமீடியா ஆகிய நிறுவனங்கள், பங்குச் சந்தையில் புதிய முதலீடுகளை திரட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களின் இயக்குனர்களும் பங்கு வர்த்தகம் புரிய தடை செய்யப்பட்டுள்ளனர். இந்நிறுவனங்கள், அவை திரட்டிய டெபாசிட்டுகளை, பிற நிறுவனங்களுக்கு மாற்றி, அவற்றின் வாயிலாக, பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளன்று பங்குகள் விலையை செயற்கையாக உயர்த்தி, பின்னர் வீழ்த்தியுள்ளதை "செபி' கண்டுபிடித்துள்ளது. இத்தொகையை திரும்பப் பெற "செபி' உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதிய பங்கு வெளியீடு தொடர்பான, செலவழிக்கப்படாத தொகையை, வங்கியில் டெபாசிட் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளில் பங்கேற்ற வணிக வங்கிகள், நிர்வாக மேலாளர்கள் ஆகியோரும், புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த 7 நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|