பதிவு செய்த நாள்
02 ஜன2012
00:08
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, 28 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய கனிம தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில், இரும்புத்தாது ஏற்றுமதியில், இந்தியா மூன்றாவது மிகப் பெரிய நாடாக உள்ளது. கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், இரும்புத்தாது வெட்டி எடுப்பதற்கு விதித்த தடையையடுத்து, நாட்டின் இரும்புத்தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், 4 கோடி டன் என்ற அளவிலேயே இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 28 சதவீதம் (5.55 கோடி டன்) குறைவாகும். மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், 45 இரும்புத்தாது சுரங்கங்கள் மூடப்பட்டதுடன், கோவாவிலும் இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், இரும்புத்தாது ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில், இரும்புத்தாது ஏற்றுமதி எதிர்மறை வளர்ச்சியையே கண்டுள்ளது. சென்ற ஆகஸ்ட்டில், 26 லட்சம் டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 45 சதவீதம் (47 லட்சம் டன்) குறைவாகும். இதே அளவிற்கு, சென்ற ஆண்டு நவம்பரில், இதன் ஏற்றுமதி குறைந்திருந்தது. அதாவது, சென்ற நவம்பரில், இதன் ஏற்றுமதி, 44 சதவீதம் குறைந்து, 83 லட்சம் டன்னிலிருந்து, 47 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், இந்தியாவிலிருந்து, 9.76 கோடி டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கும் முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 11.73 கோடி டன்னாக அதிகரித்திருந்தது என, கனிம கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. எனினும், இதே ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 44.71 ரூபாயில் இருந்து 53.07 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|