பதிவு செய்த நாள்
02 ஜன2012
11:33
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் விதமாக, பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது. இழப்பைக் குறைக்கும் வகையில், உள்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, குறைந்தது ரூ.2.10லிருந்து, அதிகபட்சமாக ரூ.2.13 வரை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, ஒவ்வொரு மாதமும், முதல் தேதியும், 15ம் தேதியும், பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, நேற்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே கடந்த வாரத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசனையைப் பெறலாம் என்றால், லோக்பால் மசோதா அரசை அலைக்கழித்தது. அதனால் உறுதியான முடிவை எடுக்கவில்லை. ஆனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு அமெரிக்க டாலர் நூறு என்ற கணக்கில் நீடிக்குமே தவிர, அதன் விலை குறையாது என்ற கருத்து எழுந்திருக்கிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்தில், அந்த நிறுவனங்கள் தினசரி செலவுக்கு நிதி ஆதாரம் திரட்டுவதே சிரமம் என்றும், அதன் விளைவாக, சுத்திகரிப்பு பணிகள் தடைபடும் என்று கருதுகின்றன. ஆனாலும், விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், அரசியல் ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஒப்புதல் கிடைத்ததும், விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|