பதிவு செய்த நாள்
05 ஜன2012
01:41
புதுடில்லி:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியால், பருப்பு வகைகள், தாவர எண்ணெய், பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அரிசி, சோளம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வோர் அதிக லாப மீட்டி வருவதாக அமெரிக்க வேளாண் (யு.எஸ்.டீ.ஏ) துறை தெரிவித்துள்ளது.
நீண்ட கால ஒப்பந்தம்: கடந்த நான்கு மாதங்களில், டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 20 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.சென்ற 2011ல், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 53.10 ரூபாய் என்ற அளவிற்கு சரிவடைந்து போனது. குறிப்பாக, முன் எப்போதும் இல்லாத அளவாக சென்ற டிசம்பர் 15ம் தேதியன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 18.79 சதவீதம் குறைந்து, 54.30 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியடைந்தால், குறிப்பாக, இறக்குமதியை சார்ந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏனெனில், இவை, பெரிய நிறுவ னங்களைப் போல், அன்னியச் செலாவணி மதிப்பு மாறினாலும் பாதிக்காதபடி, நீண்ட கால அடிப்படையில் முன் கூட்டிய ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை. அவ்வப்போது அல்லது குறுகிய கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இதனால், டாலர் மதிப்பு உயரும் போது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன.
பாதாம்: இதன்படி, அமெரிக்காவிலிருந்து, பாதாம் இறக்குமதி செய்வோர் அதிகளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இவர்கள், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 55 ரூபாயை எட்டும்பட்சத்தில், இறக்குமதியை உடனடியாக நிறுத்திக் கொள்வர் என, யு.எஸ்.டீ.ஏ தெரிவித்துள்ளது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், மஞ்சள் பட்டாணி, பச்சைப் பட்டாணி, அவரை உள்ளிட்ட பருப்பு வகைகளின் இறக்குமதி குறைந்து போயுள்ளது. இதனால், இவற்றின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், தாவர எண்ணெய் இறக்குமதியும் குறைந்துள்ளது.
அரிசி :அதேசமயம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், அரிசி,சோளம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். செப்டம்பர் முதல் டிசம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், 20 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 50 சதவீதம் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதே காலத்தில், 9 லட்சம் டன் என்ற அளவிற்கு சோளம் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, இதே காலத்தில், 6 லட்சம் டன்னாக குறைந்து காணப்பட்டது.
சோளம்:ரூபாய் வெளிமதிப்பின் வீழ்ச்சி நீடிக்கும்பட்சத்தில், நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், சோளம் ஏற்றுமதி, 30 லட்சம் டன்னை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது,கடந்த 2010-11ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், 28 லட்சம் டன் என்ற அளவில் குறைந்திருந்தது என யு.எஸ்.டீ.ஏ அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|