பதிவு செய்த நாள்
06 ஜன2012
00:38
கோல்கட்டா:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 38 லட்சத்து 68 ஆயிரத்து 831 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 23 சதவீதம் (31 லட்சத்து 47 ஆயிரத்து 512 டன்) அதிகமாகும்.சென்ற டிசம்பர் மாதத்தில், 9 லட்சத்து 53 ஆயிரத்து 526 டன் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 7 லட்சத்து 65 ஆயிரத்து 954 டன்னாக இருந்தது.
கரீப் பருவத்தில் சோயா உற்பத்தி அதிகரிப்பு, பிழி திறன் உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவற்றால், புண்ணாக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், 9 லட்சத்து 8 ஆயிரத்து 809 டன் சோயா புண்ணாக்கு, 29 ஆயிரத்து 508 டன் கடுகு புண்ணாக்கு உட்பட மொத்தம், 9 லட்சத்து 38 ஆயிரத்து 317 டன் புண்ணாக்கு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 8 லட்சத்து 49 ஆயிரத்து 370 டன்னாக இருந்தது.
வியட்நாம் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 5 லட்சத்து 42 ஆயிரத்து 676 டன்னிலிருந்து, 7 லட்சத்து 472 டன்னாக அதிகரித்துள்ளது. இதில், 5 லட்சத்து 38 ஆயிரத்து 602 டன் சோயா புண்ணாக்கும், 36 ஆயிரத்து 245 டன் கடுகு புண்ணாக்கும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 625 டன் தவிட்டு புண்ணாக்கும் அடங்கும்.தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 3 லட்சத்து 60 ஆயிரத்து 172 டன்னிலிருந்து, 5 லட்சத்து 53 ஆயிரத்து 795 டன்னாக அதிகரித்துள்ளது. இதில், 2 லட்சத்து 93 ஆயிரத்து 276 டன் கடுகு புண்ணாக்கு, 2 லட்சத்து 30 ஆயிரத்து 673 டன் ஆமணக்கு புண்ணாக்கு, 29 ஆயிரத்து 846 டன் சோயா புண்ணாக்கு ஆகும்.
ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புண்ணாக்கு இறக்குமதி, 1 லட்சத்து 40 ஆயிரத்து 83 டன்னிலிருந்து, 1 லட்சத்து 70 ஆயிரத்து 863 டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட புண்ணாக்கு ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரத்து 65 டன்னிலிருந்து, 4 லட்சத்து 37 ஆயிரத்து 151 டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|