பதிவு செய்த நாள்
06 ஜன2012
00:41
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், டிசம்பர் 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 3.36 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 0.42 சதவீதம் என்றளவில் இருந்தது.2004-05ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும், உணவு பொருள் பணவீக்கம், ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.மதிப்பீடு செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயம் விலை, 73.74 சதவீதம் குறைந்திருந்தது. மேலும், உருளைக் கிழங்கு (34.01 சதவீதம்),கோதுமை (3.41 சதவீதம்), காய்கறிகள் (50.22 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது.
அதேசமயம் ஆண்டுக் கணக்கின் அடிப்படையில், பல உணவு பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. பருப்பு வகைகள் விலை, 13.85 சதவீதம் உயர்ந்திருந்தது. பால் (9.49 சதவீதம்), முட்டை, இறைச்சி மற்றும் மீன் (13.82 சதவீதம்), பழங்கள் (10.87 சதவீதம்), தானியங்கள் (1.97 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந்தது.
மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இது, டிசம்பர் 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 2.7 சதவீதமாக அதிகரித்திருந்தது.
உணவு சாரா பிரிவின் கீழ், நூலிழை மற்றும் எண்ணெய் வித்துக்களின் விலை, 0.85 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில், 0.28 சதவீதம் என்றளவில் இருந்தது. இதே காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், 14.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 14.37 சதவீதமாக இருந்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறும்போது,"எனக்கு நினைவு தெரிந்த வரையில், தற்போது தான் உணவு பொருள் பணவீக்கம் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. இது நல்ல முன்னேற்றம்' என்றார். உணவுப் பொருள் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் முதல், 9 சதவீதத்திற்கும் மேலாகவே உள்ளது.
இது, சென்ற 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 9.11 சதவீதம் என்றளவில் இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 13 முறை உயர்த்தியுள்ளது.
சென்ற டிசம்பருக்குள் தேவைக்கும், அளிப்பிற்கும் இடையிலான பற்றாக்குறை குறைந்து, வரும் மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம், 7 சதவீதமாக குறையும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|