பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:36
கிருஷ்ணகிரி:சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தானே புயலால், கடலோரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கடலோர மாவட்டங்களுக்கு தென்னங்கீற்று அனுப்புவது அதிகரித்துள்ளது.சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பெரு நகரங்களின் கடலோரப் பகுதியில், அதிக அளவில் குடிசை வீடுகள் உள்ளன. பெரும்பாலும், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன் பிடித் தொழிலை நம்பியுள்ளவர்கள் அனைவரும், கடலோரப் பகுதியில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில் தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அதிக அளவு மழை பெய்தது. மேலும், தானே புயல் வீசியதால், கடலோரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள் சேதமடைந்தன.
பெரும்பாலும், தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வீடுகள் கட்ட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, அதிக அளவில் தென்னங்கீற்றுகள் அனுப்பப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, அதிக அளவு, அதாவது, 14 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
இதனால், தென்னை மரத்தில் இருந்து விழும் ஓலையை கொண்டு, தென்னங்கீற்று முடையும் தொழில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிசைத் தொழிலாளாகச் செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப் பாசன பகுதியில் இருந்து, அதிக அளவு தென்னங்கீற்றுகள், கடலோர மாவட்ட கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றன.இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், மலையாண்டஅள்ளி, அகரம், வேலம்பட்டி, அரசம்பட்டி, பாரூர் ஆகிய பகுதிகளில் இருந்து, நாள்தோறும் குறைந்தது, 200க்கும் மேற்பட்ட லாரிகளில், தென்னங்கீற்றுகள் அனுப்பப்படுகின்றன.நான்கு அடி நீளமுள்ள, 22 கீற்றுகள் கொண்ட ஒரு கீற்றுக் கட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன், 20 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, வியாபாரிகள் வேறு மாவட்டத்துக்கு அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, தென்னங்கீற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு கட்டு தென்னங்கீற்றின் விலை உயர்ந்துள்ளது.தற்போது, 22 கீற்றுகள் கொண்ட ஒரு கட்டுக் கீற்றின் விலை, 25 ரூபாயில் இருந்து, 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கீற்று முடைதல் தொழிலை குடிசைத் தொழிலாக செய்து வருபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|