ஸ்டார் யூனியன் டை-இசி நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்ஸ்டார் யூனியன் டை-இசி நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் ... முக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு முக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்: காளையின் ஆதிக்கம் தொடருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2012
06:19

நடப்பு 2012ம் புத்தாண்டு, எப்படி இருக்குமோ என்ற கவலை பல முதலீட்டாளர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்களுடைய கவலையை போக்கும் வகையில், பங்கு வர்த்தகம் நடப்பு வாரத்தில், ஓரளவிற்கு நன்கு இருந்தது.
உலகளவில், பல்வேறு நாடுகளில், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்ததாலும், உள்நாட்டில் பாதகமான அம்சங்கள் எதுவும் இல்லாததாலும், செவ்வாய்கிழமையன்று, 'சென்செக்ஸ்' 421 புள்ளிகள் அதிகரித்தது. இது, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. நடப்பு வாரத்தில், வங்கி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. வங்கித் துறையில், பல வங்கிகளின் பங்கின் விலை கடந்த ஆண்டை விட, பன்மடங்கு குறைந்து போயுள்ளது.
வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 11 புள்ளிகள் உயர்ந்து, 15,868 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 4 புள்ளிகள் அதிகரித்து, 4,754 புள்ளிகளிலும் நிலைபெற்றன. புத்தாண்டு துவக்கம், பங்கு வர்த்தகத்திற்கு ஊக்கமளிப்பதாகவே அமைந்தது. ஒட்டுமொத்த அளவில், நடப்பு வாரத்தில் மட்டும், 'சென்செக்ஸ்' 350 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்த வார இறுதி வர்த்தக தினத்துடன் ஒப்பிடும் போது, இந்த உயர்வு,513 புள்ளிகளாகும்.
உயர்வுக்கு காரணம் : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை, தொடர்ந்து சரிவடைந்து வந்த பங்கு வர்த்தகம், நடப்பு வார துவக்கத்தில், உயர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. என்றாலும், ரிலையன்ஸ் குழும சகோதரர்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் இணைந்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளதாக வந்த ஊக செய்தியால், சென்ற செவ்வாயன்று நடைபெற்ற கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில், பங்கு வர்த்தகம் அதிக உயர்வுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், முகேஷ் அம்பானி, தொலைக்காட்சித் துறையில், தீவிரமாக ஈடுபடும் வகையில், 'நெட்வொர்க் 18' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளார். இவர், ஏற்கனவே, ஈடிவி நிறுவனத்தில் அதிகளவில் பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, மின்னணு ஊடகத் துறை நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தன.
மத்திய பட்ஜெட் : ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டை சார்ந்தும் பங்குச் சந்தையில் வர்த்தகம் இருக்கும். இவ்வாண்டு, மத்திய பட்ஜெட், மார்ச் 16ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பொறுத்து, பங்கு வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பொருள் பணவீக்கம் : கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், 20 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, - 3.36 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பல பொருட்களின் விலை, மிகவும் குறைந்து போயுள்ளதாக அர்த்தம். ஆனால், இது, உணவுப் பொருட்களுக்கு மட்டும் தான் பொருந்தும். பொதுப் பணவீக்கம் இன்னும் ஒரு நிலையிலேயேதான் உள்ளது. இது, குறைந்தால் தான் ஒட்டு மொத்த அளவில் விலைவாசி குறைந்துள்ளது என்று அர்த்தம்.
அன்னிய முதலீடு : அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் சரிவடைந்து வருகிறது. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஈ. டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் முன்பு இருந்ததை விட, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது, அயல்நாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில், வங்கிகளில் அதிகளவில் முதலீடு செய்ய ஏதுவாக அமைந்துள்ளது. இதனால், டாலர் வரத்து அதிகரிக்கும்.
மேலும், ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருவதாலும், உள்நாட்டில் வீட்டு விலைகள் குறைந்து வருவதாலும், அயல்நாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வீடுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இவர்கள் பங்குச் சந்தைப் பக்கம் போவதாக 'தெரியவில்லை.
நேரடி வரி வசூல் : ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், மத்திய அரசின் நேரடி வரி வசூல், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தற்போதைய சூழ்நிலையில், ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நிறுவனங்கள் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி அதிகரிப்புதான் நேரடி வரி வசூல் உயர்விற்கு முக்கிய காரணமாகும்.
சில்லரை வணிகம் : மத்திய அரசு, சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீடு குறித்து மீண்டும் பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால், வெள்ளியன்று சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. ஆனால், இத்திட்டம் மீண்டும் செயலாக்கப்படுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்பது குறித்து தெரியவில்லை.
விமான கட்டணங்கள் : உள்நாட்டில், விமான சேவையில் ஈடுபட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிக போட்டி மற்றும் இழப்புகளால் சில விமான சேவை நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. இதனால், இனி வரும் காலங்களில், உள்நாட்டில் விமான கட்டணம் உயரக்கூடும். மேலும்,கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்பால், இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் அதற்கான தொகையை வாராக் கடனாக எழுதிவிட்டன.
வரும் வாரம் எப்படி இருக்கும்? : புத்தாண்டின் தொடக்க வாரம், பங்குச் சந்தைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்றாலும், வரும் வாரத்தில், பங்கு வர்த்தகம் ஏற்றம் காண்பதற்கு காரணங்கள் எதுவும் தெரியவில்லை. இனி, வரவுள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தான், சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதால், இந்நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இவற்றின் பங்குகள் உயரக் கூடும்.
- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)