பதிவு செய்த நாள்
08 ஜன2012
06:20
புதுடில்லி : நடப்பு 2011-12ம் பருவத்தின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான முதல் மூன்று மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இதன் உற்பத்தி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
டிசம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 75 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய உற்பத்தி 11 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2011-12ம் பருவத்தில், சர்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எம்.ஏ) மதிப்பிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில், சர்க்கரை உற்பத்தி 5 லட்சம் டன் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம். ஆலைகளுக்கு, முன்கூட்டியே கரும்பு வரத்து அதிகரித்ததால், டிசம்பர் வரையிலுமாக, உத்தரபிரதேசத்தில், 2.61 கோடி டன் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டில் 1.97 கோடி டன்னாக இருந்தது. ஆனால், கடந்தாண்டு பிழிதிறன் 8.81 சதவீதமாக இருந்தது. இது, இவ்வாண்டில், 8.45 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், 490 ஆலைகள் கரும்பு அரவையில் ஈடுபட்டன. இது, நடப்பாண்டு இதே மாதத்தில், 503 ஆக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், மகாராஷ்டிராவில், சர்க்கரை உற்பத்தி 3 லட்சம் டன் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இம்மாநிலத்தின் கரும்பு அரவை 15 சதவீதம் அதிகரித்து, 2.31 கோடி டன் என்ற அளவிலிருந்து, 2.66 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், கரும்பின் பிழிதிறன் 9.8 சதவீதத்திலிருந்து, 10.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இம்மாநிலங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் சர்க்கரை உற்பத்தி 2 லட்சம் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது என, ஐ.எஸ்.எம்.ஏ. மேலும் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.எம்.ஏ., கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து, செயற்கைகோள் துணையுடன் கரும்பு பயிரிடும் பரப்பளவு பற்றிய இரண்டாவது மதிப்பீட்டை வரும் பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|