பதிவு செய்த நாள்
08 ஜன2012
06:21
கொச்சி : டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்துள்ளதால், கயிறு பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரம்பரிய சந்தைகளில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது என, கயிறு பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டது. இது, இறக்குமதியாளர்களுக்கு பாதகமான அம்சம் என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான அம்சம்.
ரூபாய் மதிப்பு : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், கயிறு பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் , 17.46 சதவீதமும், அளவின் அடிப்படையில், 20.69 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட, சென்ற நவம்பர் மாதத்தில், கயிறு பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 11.71 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், இதே மாதங்களில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 1.25 சதவீதம் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், 562 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 2 லட்சத்து 40 ஆயிரத்து 163 டன் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 478 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 1 லட்சத்து 98 ஆயிரத்து 896 டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், தேங்காய் நார், கயிறு சடை, கயிறு போன்றவற்றின் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
அதேசமயம், தரை விரிப்புகள், நாரிழை, மிதியடி, கயிறு நாராலான மெத்தை ஆகியவற்றின் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் குறைந்துள்ளது. இவற்றின் ஏற்றுமதி, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், 22 சதவீதமும், அளவின் அடிப்படையில், 23 சதவீதமும் உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி இலக்கு : கடந்த 2010-11ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூலப் பொருட்கள் பற்றாக்குறையால், 804 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 லட்சத்து 94 ஆயிரத்து 508 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, அளவின் அடிப்படையில், 47.31 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 25.64 சதவீமும் அதிகம்.
கடந்த முழு நிதியாண்டில், மொத்த கயிறு பொருட்கள் ஏற்றுமதியில், நார் கயிறு மட்டுமே உச்சத்தை தொட்டது. இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 321 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 523 சதவீதமும் உயர்ந்திருந்தது.
உள்நாட்டில், கயிறு பொருட்கள் தயாரிப்பிற்கு முக்கிய மூலப் பொருளான கயிறிழை, தேங்காய் நார், கயிறு தூள் போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தரைவிரிப்புகள், மிதியடி, மெத்தைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளானது.
பொருளாதார மந்த நிலை : சர்வதேச பொருளாதார மந்த நிலையால், கயிறு பொருட்களுக்கு முக்கிய சந்தைகளாக திகழும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இதன் பயன்பாடு குறைந்து போனது. இதுவும் ஏற்றுமதி சரிவடைவதற்கு முக்கிய காரணம். இருப்பினும், தற்போது, புதிய சந்தைகளுக்கு இவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கயிறு பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதிலிருந்து, பல பொருட்கள் உருவாக்கப்பட்டு வருவதால், உலகின் பல நாடுகளில், இப்பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடரும் பட்சத்தில், வரும் காலத்தில், இந்தியாவின் கயிறு பொருட்கள் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என, கயிறு வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|