பதிவு செய்த நாள்
10 ஜன2012
00:11
புதுடில்லி: பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, மூன்று மாதங்களில், 34 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், மானிய விலையில் பெட்ரோலியப் பொருட்களை வழங்கி வருகின்றன.கடந்த 2010ம் ஆண்டு, ஜூன் மாதம், பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
ஆனால், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலை கட்டுப்பாடு நீடிப்பதால், எண்ணெய் நிறுவனங்கள், அவற்றை அடக்க விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்து வருகின்றன.இதனால், இந்நிறுவனங்கள் பெருத்த இழப்பை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு, மானியம் வழங்கும் போதிலும், இந்நிறுவனங்களின் இழப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது.இதன்படி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், மூன்று நிறுவனங்களும், 34 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இழப்பு, 19 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதர இரு நிறுவனங்களுக்கும், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், டாலரில் செலுத்தி வருகின்றன. ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், இந்நிறுவனங்களின் இழப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|