பதிவு செய்த நாள்
11 ஜன2012
00:15
புதுடில்லி: நடப்பு முழு நிதியாண்டில் (2011-12), இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு (எப்.டீ.ஐ.), 30 ஆயிரம் கோடி டாலரை (1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற நவம்பர் மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 253 கோடி டாலராக (12 ஆயிரத்து 650 கோடி ரூபாய் ) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில், மேற்கொள்ளப்பட்ட எப்.டீ.ஐ.யை விட, 56 சதவீதம் (162 கோடி டாலர் - 8,100 கோடி ரூபாய்) அதிகம்.
பங்கு வர்த்தகம்
கடந்த ஒரு சில மாதங்களாக, இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடு வெகுவாக குறைந்து போயுள்ளது.
மேலும், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வளர்ச்சி கண்டு வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை வெகுவாக விலக்கிகொண்டன.
இதனால், டாலர் வரத்து குறைந்து போயுள்ளதுடன், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பும் சரிவடைந்துள்ளது. நாட்டின், வர்த்தக பற்றாக்குறை சரிவிற்கு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு நிலையும் காரணமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்து வருவது என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை, லாப நோக்கம் கருதி எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொள்ளும். இதனால், நாட்டிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது.
அதேசமயம், அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது கூட்டுத் திட்டம் அல்லது அன்னிய நிறுவனங்கள் அவற்றின் இந்திய செயல்பாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடாகும். இந்த முதலீட்டை உடனடியாக திரும்பப் பெற முடியாது என்பதால், இது, நாட்டிற்கு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
ஒன்பது மாத காலத்தில்நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,283 கோடி டாலராக (1 லட்சத்து 14 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.அதேசமயம், கடந்த 2010-11ம் முழு நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 1,943 கோடி டாலராக (97 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) இருந்தது. ஆக, கடந்த முழு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, ஒன்பது மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நடப்பு முழு நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, 30 ஆயிரம் கோடி டாலரை தண்டி விடும் என பல ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், கடந்தாண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடும் போது முறையே, 16.5 சதவீதம் மற்றும் 50 சதவீதம் சரிவடைந்திருந்தது.
அதேசமயம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 62.81 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, 1,402 கோடி டாலரிருந்து, 2,283 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்கள்கடந்த 2010-11ம் நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, அதற்கும் முந்தைய நிதியாண்டை விட, 25 சதவீதம் சரிவடைந்து, அதாவது, 2,560 கோடி டாலரிலிருந்து, 1,943 கோடி டாலராக குறைந்து போனது. கடந்த 2008-09ம் நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடு, 2,730 கோடி டாலராக இருந்தது. அமெரிக்கா, சிங்கப்பூர்இந்தியாவில், அதிகளவில் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்வதில், மொரீஷியஸ் நாடு முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் உள்ளன.
இந்தியாவில், சேவைத் துறைகள், கட்டுமான நடவடிக்கைகள், மின்சாரம், கம்ப்யூட்டர் - ஹார்டுவேர், தொலைத் தொடர்பு, வீட்டு வசதி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீடு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|