பதிவு செய்த நாள்
14 ஜன2012
01:07
புதுடில்லி:உள்நாட்டில் உள்ள துறைமுகங்கள், வரும் 2020ம் ஆண்டிற்குள், ஆண்டுக்கு 320 கோடி டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு, 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவில் விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.ஒடிசா மாநிலத்தில் உள்ள பரதீப் துறைமுகத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் வாசன் பேசியதாவது:உள்நாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளும் சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது. நாட்டில்
13 பெரிய துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவை அனைத்துமாக, ஆண்டுக்கு 100 கோடி டன் அளவிற்கு சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளன. வரும், 2020ம் ஆண்டில், இத்துறைமுகங்கள் கையாளும் சரக்குகளின் அளவு, ஆண்டுக்கு 250 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்துறைமுகங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதுடன், இதர அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.விரிவாக்கத்திற்கு பிறகு, இத்துறைமுகங்களின் தரம், சர்வதேச அளவிற்கு உயர்த்தப்படும். தற்போது, மும்பை, ஜவர்ஹலால் நேரு போர்ட் டிரஸ்ட், கோல்கட்டா (ஹால்டியா துறைமுகம் சேர்த்து), சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி, பரதீப், புதிய மங்களூர் துறைமுகம், மர்மகோவா, எண்ணூர், தூத்துக்குடி, கண்ட்லா மற்றும் போர்ட் பிளேர் ஆகிய
13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.பரதீப் துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறன், வரும் 2020ம் ஆண்டில், ஆண்டுக்கு 25.10 கோடி டன்னாக அதிகரிக்கப்படும். இத்துறைமுகம் கடந்த 2010-11ம் நிதியாண்டில், 5.60 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதில், இறக்குமதி செய்யப்பட்ட 3.12 கோடி டன் சரக்குகளும், 2.48 கோடி டன் ஏற்றுமதியான சரக்குகளும் அடங்கும். இவ்வாறு வாசன் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|