பதிவு செய்த நாள்
14 ஜன2012
01:19
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக இருந்தது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அவற்றின் கடன் பத்திரங்களை வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளன. இது, சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ள அதன் நிதி நிலை ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக் கூடும் என்ற கருத்து வலுவாக நிலவுகிறது. இதுவும் பங்கு வர்த்தகத்திற்கு வலுச்சேர்த்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், பொறியியல், ரியல் எஸ்டேட், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 117.11 புள்ளிகள் அதிகரித்து, 16,154.62 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 16,257.34 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,049.78 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 34.75 புள்ளிகள் உயர்ந்து, 4,866 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,898.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,834.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|