பதிவு செய்த நாள்
16 ஜன2012
00:06
கோவை: ""தொழில் நிறுவனங்கள் சரியான வழிமுறைகளை கடைப்பிடித்தால், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்,'' என, மத்திய பெட்ரோலியம் சிக்கன ஆராய்ச்சி சங்கத்தின் கூடுதல் செயலர் அருண்குமார் தெரிவித்தார்.தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கமும், பெட்ரோலியம் சிக்கன ஆராய்ச்சி சங்கமும் இணைந்து, "இந்திய தொழிற்சாலைகளில், மின் சிக்கன வாய்ப்புகள்' பற்றிய ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின.
இதில், தமிழ்நாடு மின் வாரியத்தின், கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு பேசியதாவது:ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, ஐந்து கோடி ரூபாய் செலவாகும். இந்த மின்சாரத்தை வினியோகம் செய்ய, 15 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும். மின் சிக்கனத்தை கடைப்பிடிப்பதாலும், குண்டு பல்புகளை மாற்றுவதாலும், தமிழகத்தில் 500 முதல் 600 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.வீடு கட்டுவோர் செலவினத்தின் ஒரு பகுதியாக, சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த, நிதி ஒதுக்க வேண்டும். 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவோர், கட்டாயம் சூரிய ஒளி வெப்பத்தை பயன்படுத்தும், சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள், தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு மின் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தங்கவேலு பேசினார்.மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கத்தின் கூடுதல் செயலர் அருண்குமார் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில், மின்சாரத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி ஆய்வின் படி, வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் எரிசக்திக்கான தேவை, 55 சதவீதம் வளர்ச்சி பெறும். இந்தியாவிலும், சீனாவிலும் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கும். பெட்ரோலிய எரிபொருளின் தேவை, வரும் 2030ம் ஆண்டிற்குள், 84 சதவீதம் அதிகரிக்கும்.அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள, தனி நபர் மின் நுகர்வை காட்டிலும், இந்தியாவில் குறைவான மின் நுகர்வே உள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியா, ஐந்தாவது மிகப்பெரிய மின் நுகர்வு நாடாக மாறும்.
இந்திய அளவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயத்துக்கான மின் பயன்பாட்டில், சிக்கனத்தை கடைப்பிடித்தால், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை மிச்சப் படுத்த முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|