பதிவு செய்த நாள்
16 ஜன2012
00:06
ஏற்றுமதி வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இரும்புத் தாது ஏற்றுமதியாளர்களுக்கு, ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு, மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஏற்றுமதி வரிஉள்நாட்டில், உருக்குத் துறையை பாதுகாக்கும் நோக்குடன், மத்திய அரசு, மூலப் பொருளான இரும்புத் தாது ஏற்றுமதி மீதான வரியை, 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே, சர்வதேச சந்தையில், இரும்புத் தாது விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள், இதனால் மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனினும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இரும்புத் தாது ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிப்பதாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 16 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற டிசம்பர் மாத மத்தியில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு முதன் முறையாக 54.30 என்ற அளவிற்கு சரிவடைந்தது. எனினும் வெள்ளியன்று டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 51.83 ஆக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பரில், 156 டாலராக இருந்த, ஒரு டன் உயர் ரக இரும்புத் தாது, டிசம்பரில் 124 டாலராக குறைந்துள்ளது. இதே காலத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 49.61ல் இருந்து 53.23 ஆக குறைந்துள்ளது. இது, இரும்புத் தாது ஏற்றுமதியாளர்களின் லாபவரம்பை தக்க வைத்துக் கொள்வதற்கு உதவி புரிந்துள்ளது.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், ஏற்றுமதிக்கான இரும்புத் தாதுவின் மதிப்பு பெரிதும் சரிவடைந்துள்ளது. ஒரு டன் இரும்புத் தாது 7,740 ரூபாயிலிருந்து 5,251 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதே சமயம், இந்த வீழ்ச்சியை ஓரளவிற்கு ஈடு செய்யும் விதமாக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் டாலர் மதிப்பு உயர்ந்தது.
தற்போது, இரும்புத் தாது ஏற்றுமதிக்கு, 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால், 10 லட்சம் டன் இரும்புத் தாதுவிற்கான ஏற்றுமதி வரிச்செலவு 26 டாலரில் இருந்து, 39 டாலராக உயர்ந்துள்ளது.குறைந்த தரத்திலான இரும்புத் தாது ஏற்றுமதி வரிச் செலவினம் கூட, 10 லட்சம் டன்னுக்கு 20.6 டாலரில் இருந்து 30.9 டாலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தைசர்வதேச சந்தை விலையின் அடிப்படையிலேயே, இரும்புத் தாது விற்பனை மேற்கொள்ளப்படுவதால், இந்த உயர்வை நுகர்வோர் மீது சுமத்த முடியாது என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக சந்தையில், இரும்புத் தாதுவின் விலை உயர்ந்தால் மட்டுமே, வரி உயர்வின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியும் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.
ஆனால், அசோசெம் அமைப்பு, ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தேசிய நலனை கருத்தில் கொண்டு, இரும்புத் தாது வளத்தை பாதுகாக்க வேண்டும் என இந்த அமைப்பு கூறியுள்ளது.
இறக்குமதிசென்ற 2010-11ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து 470 கோடி டாலர் மதிப்பிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே சமயம், 1,100 டாலர் மதிப்பிற்கு, பயன்பாட்டிற்கான உருக்கு, இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பிற்கும், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவதற்கும் காரணமாக இருந்தது.
இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்தால் வர்த்தகப் பற்றாக்குறை குறையும். எனினும், உள்நாட்டு தொழில் துறையை காக்கும் நோக்கில், இரும்புத் தாது போன்ற முக்கிய கனிமங்களின் ஏற்றுமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|