பதிவு செய்த நாள்
18 ஜன2012
00:06
புதுடில்லி: "நாட்டின் பொதுப் பணவீக்கம் குறைந்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் மற்றும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) குறைக்க வேண்டும்' என, அசோசெம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கமும், பொதுப் பணவீக்கமும் குறைந்துள்ளது. குறிப்பாக, சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 7.47 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில், 9.11 சதவீதமாக இருந்தது.பணவீக்கம் அதிகரித்ததையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் முதல் 2011ம் ஆண்டு நவம்பர் வரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 13 முறை உயர்த்தியது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தொழில் துறை நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற முடியாமல் உள்ளன. இது, தொழில் துறை உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய சூழ்நிலையில், பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, குறைந்த கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும், ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.50 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும். அதேபோன்று, வங்கிகள் அவற்றின் மொத்த டெபாசிட்டிலிருந்து, குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க இருப்பு விகிதத்தையும் 1 சதவீதம் குறைக்க வேண்டும்.தற்போது, ரொக்க இருப்பு விகிதம் 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதை 1 சதவீதம் குறைக்கும் நிலையில், வங்கிகள் வசம் 56 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஆதாரம் கிடைக்கும். கடந்த அக்டோபர் இறுதி வரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட் 56 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. ரெப்போ ரேட் மற்றும் ரொக்க இருப்பு விகிதங்கள் குறைக்கப்படும் நிலையில், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும் என அசோசெம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|