பதிவு செய்த நாள்
20 ஜன2012
01:05
திருப்பூர்:சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் பருத்தி விலை உயரத்துவங்கியுள்ளது. இதனால், நூலிழை விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இந்தியாவில் நடப்பாண்டில் 3.50 கோடி பொதிகள் அளவுக்கு பருத்தி விளைச்சல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. குறித்த காலத்தில் அறுவடையும் துவங்கியது; உள்நாட்டு தேவை குறைந்திருந்த காரணத்தால், விலையில் மாறுதல் ஏற்படவில்லை. வெளிநாட்டு சந்தைகளிலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
சாயத்தொழில் பிரச்னையால், திருப்பூர் பனியன் தொழில் மந்தமானபோது, நூலிழைக்கான பயன்பாடும் குறைந்தது. நூலிழை விலையும் கிலோவுக்கு 20 ரூபாய் வரை குறைந்தது.
இத்தகைய சூழ்நிலையில் தான், சீனாவுக்கான பருத்தி ஏற்றுமதி சூடு பிடித்துள்ளது. இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது, சீனாவின் "யுவான்' மதிப்பு நிலையானதாக இருப்பது, அந்நாட்டு வர்த்தகர்களுக்கு சாதகமாக உள்ளது. உள்நாட்டில் விளைந்த பருத்தியை வாங்கி, "ஜின்னிங்' செய்து பஞ்சாக மாற்றுவதை காட்டிலும், இந்தியாவில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வது, அந்நாட்டு தொழில் துறையினருக்கு லாபகரமானதாக இருக்கிறது.இதன் விளைவாக, சீன நூற்பாலைகள், இந்தியாவில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்வதில் தீவிரம் காட்டுகின்றன. மந்தநிலை மாறி, திடீரென பஞ்சு ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், 35 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி பஞ்சு விலை, தற்போது 40 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இதனால், நூலிழை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம், நூற்பாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
"டாஸ்மா' சங்க தலைவர் அப்புக்குட்டி, தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் ஆகியோர் கூறுகையில், ""சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவியதால், எந்தவொரு நூற்பாலையும் பஞ்சை கையிருப்பில் வைக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதத்தை காட்டிலும் பஞ்சு விலை, ஒரு கேண்டிக்கு 4,300 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், நூலிழை விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.இது குறித்து, திருப்பூர் மாவட்ட நூலிழை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜிடம் கேட்டபோது, ""பஞ்சு விலை உயர்வு காரணமாக, காட்டன் ஒசைரி நூல் விலையும் உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ 20ம் நம்பர் நூல் 180 ரூபாய்; 25ம் நம்பர் 188; 30ம் நம்பர் நூல் 200; 34 நம்பர் 208; 40ம் நம்பர் நூல் 215 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கடந்த வார விலையை காட்டிலும், கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, 50 மற்றும் 60ம் நம்பர் நூல் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|