பதிவு செய்த நாள்
20 ஜன2012
01:07
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதலே, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. இதுவும், வர்த்தகத்திற்கு வலு சேர்த்தது.
மின் உற்பத்தி துறை நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை அதிகாரிகளும், நிலக்கரிக்கு உள்ள பற்றாக்குறை, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகள் மற்றும் இத்துறை சந்தித்து வரும் நிதிப் பிரச்னைகள் போன்றவற்றிற்கு தீர்வு காணும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்தனர். மின் துறை நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என, பிரதமர் உறுதியளித்தார். இதையடுத்து, மின் துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது.
மேலும், ரியல் எஸ்டேட், வங்கி, உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 192.27 புள்ளிகள் அதிகரித்து, 16,643.74 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 16,662.06 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,572.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' கடந்த மாதம் 7ம் தேதிக்கு பிறகு, மீண்டும் 5,000 புள்ளிகளைத் தாண்டி, 62.60 புள்ளிகள் உயர்ந்து, 5,018.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,023.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,991.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|