பதிவு செய்த நாள்
22 ஜன2012
03:11
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி துணிகள் உற்பத்தியும், விற்பனையும் கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டில் சரிவடைந்துள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 22.06 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்துள்ளது.
முதலிடத்தில் ஈரோடு : கைத்தறி மற்றும் விசைத்தறி மூலமாக ஜவுளி உற்பத்தி செய்யும் மாவட்டங்களில், ஈரோடு முதலிடத்தில் உள்ளது. இங்கு, 185 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 32 விசைத்தறி நெசவாளர் சங்கங்களும் உள்ளன.
கூட்டுறவு சங்கங்களின் கீழாக, 38 ஆயிரத்து 136 கைத்தறி மற்றும் 13 ஆயிரத்து 237 விசைத்தறிகள் உள்ளன. தனியாரிடம், 13 ஆயிரத்து, 826 கைத்தறி மற்றும் 70 ஆயிரத்து, 620 விசைத்தறிகளுமாக, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 819 தறிகள் துணி உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
மாவட்டத்தில், 40 ஆயிரத்து 739 கைத்தறி நெசவாளர்களும், 2,920 விசைத்தறி நெசவாளர்களும் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஈரோடு மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், பெட்ஷீட், ஜமுக்காளம், துண்டு, படுக்கை விரிப்புகள், திரைச்சீலை, சால்வை, ஏற்றுமதி ரக துணிகள் மற்றும் தமிழக அரசின் பொங்கல் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்களிலிருந்து நூலிழை வாங்கி, கூலிக்கும், சில இடங்களில் சுயமாகவும் உற்பத்தி செய்து, கடைகளுக்கும், கைத்தறி கண்காட்சி மூலமாகவும் விற்பனை செய்கின்றனர். கூட்டுறவு சங்கங்களும், நெசவாளர் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் கண்காட்சிகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திய நிலையிலும், நடப்பாண்டு, கைத்தறி நெசவாளர்களின் துணி உற்பத்தி, மற்றும் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் : கடந்த 2009-10ல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி மதிப்பு, 258.09 கோடி ரூபாய் விற்பனை மதிப்பு, 322.64 கோடி ரூபாய். 2010-11ல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி மதிப்பு, 271.39 கோடி, விற்பனை மதிப்பு, 326.26 கோடி ரூபாய். ஆனால், 2011-12ல், நவம்பர் வரை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி மதிப்பு, 164.54 கோடி ரூபாய் என்ற அளவிலும், விற்பனை மதிப்பு, 199.18 கோடி ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, உற்பத்தியும், விற்பனை மதிப்பும், 10 கோடி ரூபாய்க்கும் மேலாக சரிவை சந்தித்துள்ளது. தவிர, நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி விற்பனை கண்காட்சியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கண்காட்சி : ஆனால், 59.77 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதுபோல, பொங்கல் பண்டிகைக்கு, 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்து கண்காட்சி நடத்தப்பட்டது. எனினும், இன்று வரை, கைத்தறி நெசவாளர் சங்கங்களில், 22.06 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேங்கியுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, தேக்கம் கண்டுள்ள துணிகளை, பல்வேறு திட்டங்கள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவந்தால் தான், மாநிலம் முழுவதுமாக, கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கச் செய்ய முடியும். இல்லையேல், கைத்தறி நெசவுத் தொழில் நாளடைவில் மிகவும் நலிவடைந்து விடும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|