பதிவு செய்த நாள்
22 ஜன2012
03:13
புதிய ஆண்டு பிறந்ததிலிருந்து, நாட்டின் பங்கு வர்த்தகம் சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது. இதற்கு, நிறுவனங்களின் சாதகமான காலாண்டு முடிவுகளும், நாட்டின் பணவீக்கம் குறைந்து வருவதுடன், சர்வதேச அளவில் பிரச்னைகள் இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணங்களாகும்.
நடப்பு வாரத்திலும், பங்கு வியாபாரம் நன்றாகவே இருந்தது. ஆக, கரடியின் பிடியிலிருந்த பங்கு வர்த்தகம், தற்போது காளையின் ஆதிக்கத்திற்குள் வந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று, இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' 95 புள்ளிகள் அதிகரித்து, 16,739 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 30 புள்ளிகள் உயர்ந்து, 5,048 புள்ளிகளிலும் நிலை கொண்டன. நடப்பு வாரத்தில், ஒட்டுமொத்த அளவில் "சென்செக்ஸ்' 550 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
லீப் வருடமும், பங்குச் சந்தையும்... : நடப்பு 2012ம் ஆண்டு லீப் வருடமாகும். இதுவரையிலும், எந்த ஒரு லீப் வருடத்திற்கும் முந்தைய ஆண்டில் பங்கு வர்த்தகம் சரிவடைந்து இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அண்மையில், எல்லோருக்கும் மின் அஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அதில், லீப் வருடத்தில், பங்கு வர்த்தகம் நன்றாக இருப்பதாகவும், இது, நடப்பு லீப் ஆண்டிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்தால் போதும் என்ற நிலைப்பாடு தான் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு லீப் வருடத்தில், "சென்செக்ஸ்' 20,664 புள்ளிகளுக்கும் மேல் சென்றுள்ளது. இது, நடப்பு 2012ம் ஆண்டு லீப் வருடத்தில், மேலும் அதிகரிக்குமா என்பது தான் முதலீட்டாளர்களின் வினாவாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் : பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த 20ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அதன் பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தற்போது, இதன் பங்குகளின் விலை குறைந்துள்ளதால், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் கைவசம், ரொக்க இருப்பு அதிகமாக இருப்பதால், இந்நிறுவனத்தால், பங்குகளை திரும்ப பெற முடிகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டை,13.6 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு, நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பின் வாயிலான லாப வரம்பு குறைந்தது தான் காரணம் என கூறப்பட்டது.
இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவு சற்று குறைந்துள்ளதால், திங்களன்று பங்கு வர்த்தகத்தில், சிறிது சலசலப்பு ஏற்படக் கூடும். ஆனால், நிறுவனம் பங்குகளை திரும்ப பெறும் திட்டத்தால், பங்குச் சந்தையில், தாக்கம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. நிறுவனத்தின் பாலிமர் வர்த்தகத்தில், லாபம் குறைந்து வருவது மற்றும் கே.ஜி.டீ-6 எண்ணெய் வயல்களில், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து வருவது போன்றவை கவலை தரும் செய்திகளாகும்.
காலாண்டு முடிவுகள் : எச்.டி.எப்.சி. பேங்க், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர், என்.ஐ.ஐ.டி., பிராஜ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல். டெக்னாலஜீஸ், போலாரீஸ், ஐ.டி.சி., ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சிண்டிகேட் பேங்க், எக்சைடு இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஹீரோ மோட்டார் கார்ப், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடுகள், கடந்தாண்டின் இதே காலாண்டை விட சிறப்பாக அமைந்துள்ளது. அதேசமயம், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஜெட் ஏர்வேஸ், இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சரிவடைந்துள்ளது.
மின் கட்டணம் : என்.டி.பி.சி. நிறுவனம், மின்சார கட்டணம், மேலும் 30 முதல் 40 சதவீதம் வரை உயரக் கூடும் என அறிவித்துள்ளது. இது, உடனடியாக இல்லாவிட்டாலும், வரும் காலங்களில், இத்துறையில் ஈடுபடும் ஒவ்வொரு நிறுவனமாக, மின் கட்டணத்தை உயர்த்தக் கூடும். மின்சாரத்தை சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய துண்டு விழும் அபாயம் ஏற்படும்.
தங்க இறக்குமதி வரி : தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் மீதான இறக்குமதி வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருமான அதிகரிப்பிற்கு, இது ஒரு வழியாகும்.
ஆனால், வரி அதிகரிப்பிற்கு பிறகு, தங்கம் விலை ஏன் கூடவில்லை என பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வரி அதிகரிப்பிற்கு பிறகு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு கூடியது தான் இதற்கு காரணம்.
சென்ற மாத இறுதியில், ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 54 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இது தற்போது, 50.33 ரூபாயாக உள்ளது. இதனால், வரி அதிகரிப்பின் தாக்கம் விலையில் எதிரொலிக்கவில்லை.
வரும் வாரம் எப்படி இருக்கும்? : இதுவரை வெளிவந்துள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக உள்ளது. குறிப்பாக, வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளன.
சர்வதேச நிலவரங்களிலும், அதிக பாதிப்பு தென்படவில்லை. இதுபோன்ற சாதகமான நிலை தொடரும் பட்சத்தில், வரும் வாரத்திலும் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட கூடும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|