பதிவு செய்த நாள்
23 ஜன2012
00:08
ஓசூர்: ஓசூர் தாலுகாவில், கடும் குளிர் காற்றால், குடை மிளகாய் செடிகளில் இலை சுருள் நோய் ஏற்பட்டு, தரமற்ற குடை மிளகாய்கள் உற்பத்தியாவதால், ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நல்ல மண் வளமும், குளிர்ந்த காலநிலையும் கொண்ட, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், அதிகளவு காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. ஓசூர், பாகலூர், பேரிகை, பேளகொண்டப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதியில், 2,000 ஏக்கரில் பசுமை குடோன் முறையில் குடை மிளகாய் சாகுபடி நடக்கிறது.பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு கலர்களில் கண்ணை கவரும் வகையில் உற்பத்தியாகும் அதிக காரமில்லாமலும், சுவையாகவும் இருப்பதால், இந்த குடை மிளகாய்கள், பல்வேறு சிற்றுண்டிகள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.குறிப்பாக, சாலையோர டீ கடைகளில் பஜ்ஜி போடுவது முதல் நட்சத்திர ஓட்டல்கள், தாபா ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பிரைட் ரைஸ், பீசா உணவுகள், வெஜிடேபிள் காய்கறி உணவுகள், அசை உணவுகள், கார உணவுகள் தயாரிப்பில் குடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் இவ்வகை குடை மிளகாய்கள், நியூசிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அரேபிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாகிறது. வெளிநாடுகளில் பெரும்பாலும், மக்கள் அதிகளவு பச்சை உணவு வகைகள் சாப்பிடுவதால், ஓசூர் குடை மிளகாய்களுக்கு சர்வதேச சந்தையிலும் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது, ஓசூர் பகுதியில், மூன்று மாதமாக வீசும் பனிக்காற்று, மூடுபனியால் குடை மிளகாய் செடிகளில் மர்ம நோய் தாக்கியுள்ளது. அதனால், செடிகள் சுருங்கி தரமில்லாத குடை மிளகாய்கள் உற்பத்தியாகிறது. அதனால், வெளிநாட்டு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.அதனால், பசுமை குடோனில் பல லட்சம் ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்த தரமில்லாத இந்த குடை மிளகாய்களை, விவசாயிகள், உள்ளூர் உழவர் சந்தை, டீ கடைகள், ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:நடப்பாண்டு, எப்போதும் இல்லாத வகையில் பனிக்காற்று, மூடுபனி நீண்ட மாதம் நீடிக்கிறது. பனிக்காற்றால், செடியில் உள்ள இலைகள் சுருண்டு, உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. நோய் தாக்குதலால், மிளகாய்களில் வெள்ளை மற்றும் கறுப்பு கலர் புள்ளிகள் உண்டாகிறது. இதனால், இந்த மிளகாய்களுக்கு சர்வதேச மார்க்கெட்டுகளில் வரவேற்பு குறைந்துள்ளது.தரமில்லாததால், ஏற்றுமதி வியாபாரிகள், அடிமாட்டு விலைக்கு உள்ளூர் வியாபாரிகளுக்கு குடை மிளகாய்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பசுமை குடோன், மருந்து செலவு மற்றும் நீர் பாசனம், கூலி ஆட்கள் சம்பளம் உள்ளிட்ட பராமரிப்பு செலவை கூட எதிர்கொள்ள முடியவில்லை. தமிழக அரசு, தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|