பதிவு செய்த நாள்
23 ஜன2012
12:05
சபரிமலை:மண்டல பூஜை மற்றும் மகரஜோதி உற்சவம் என, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்திருந்த 64 நாட்களில் வருமானம், 174 கோடியே 46 லட்சம் ரூபாய் கிடைத்தது. இது, கடந்தாண்டு வருவாயை விட 20 கோடி ரூபாய் அதிகம்.கேரளா, சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 28ம் தேதி அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 30ம் தேதி, மகரஜோதி தரிசனத்திற்காக திறக்கப்பட்ட நடை நேற்று முன்தினம் அடைக்கப்பட்டது.கோவிலில் தரிசனத்திற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் வந்திருந்தனர். நடை திறந்திருந்த 64 நாட்களில், பக்தர்கள் காணிக்கையாக 73 கோடி, அரவணை பிரசாத விற்பனை மூலம் 66 கோடி, அப்பம் விற்பனையில் 13 கோடி என, பல வகைகளில் மொத்த வருமானம் 174 கோடியே 46 லட்சம் ரூபாய் கிடைத்தது. இது, கடந்தாண்டு விற்பனையை விட 20 கோடி ரூபாய் அதிகம்.நேற்று முன்தினம் காலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.
பின்னர் இளநீர், பால், நீர் ஆகியவை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மகரஜோதி உற்சவத்தின் போது சுவாமிக்கு அணிவித்த திருவாபரணங்கள் கோவிலில் இருந்து பந்தள அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டன.தொடர்ந்து, பந்தள ராஜா குடும்பத்தின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ள ஹரிவர்மா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், சுவாமிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரருவும், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரியும் சேர்ந்து விபூதி அபிஷேகம் செய்வித்தனர்.இதையடுத்து, சுவாமிக்கு ஜபமாலை சார்த்தியும் யோக நிஷ்டையில் ஆழ்த்தினர்.பிறகு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி பந்தள ராஜா குடும்பத்தின் பிரதிநிதியிடம் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர், மீண்டும் அடுத்தாண்டு மகரஜோதி தரிசனத்திற்காக நடை திறக்க வசதியாக, சாவிகளை மேல்சாந்தியிடம் திருப்பி அளித்து விடை பெற்றார்.நேற்று முன்தினம் அடைக்கப்பட்ட அய்யப்பன் கோவில் நடை, வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைகளுக்காக திறக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|