பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:08
மும்பை: மிளகாய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மிளகாய் வற்றல் விலை மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிளகாய் உற்பத்தியில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இங்கு தற்போது மிளகாய் அறுவடை துவங்கியுள்ளது. இம்மாநிலத்தில், மிளகாய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், உள்நாட்டு சந்தைகளில் அதன் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்திலும் மிளகாய் உற்பத்தி பெருகியுள்ளதால், நடப்பாண்டு துவக்கத்தில், இம்மாநிலத்தில் இருந்து முதன் முதலாக சந்தைக்கு வந்த மிளகாயின் வரத்து, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மந்தமடைந்துள்ள ஏற்றுமதியால், உள்நாட்டில் ஒரு கிலோ மிளகாய் விலை, இவ்வாண்டின் துவக்கத்தில் 50-55 ரூபாயாக குறைந்திருந்தது. எனினும், தேவை அதிகரிப்பால், தற்போது மிளகாய் விலை சற்று உயர்ந்து, ஒரு கிலோ 60-65 ரூபாய் என்ற அளவில் விலை அதிகரித்துள்ளது.சென்றாண்டு, இதே காலத்தில், ஒரு கிலோ மிளகாய் விலை 90-100 ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு, மிளகாய்க்கு நல்ல விலை கிடைத்ததால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள், பருத்தி பயிரிடுவதை கைவிட்டு, மிளகாய் சாகுபடிக்கு மாறினர். இதனால், இந்த இரு மாநிலங்களிலும் மிளகாய் பயிரிடும் பரப்பளவு 10-15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டு மிளகாய் விளைச்சல் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி, வரும் மாதங்களில் மிளகாய் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்றாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது மிளகாய் வற்றல் விலை 35 சதவீதம் குறைந்துள்ளது. இது, மேலும் குறையும்பட்சத்தில், விவசாயிகள், மிளகாயை விற்பனை செய்யாமல், இருப்பு வைத்து, விலை உயரும் போது அவற்றை விற்க விரும்புவர் என, இத்துறை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.அதற்கேற்ப, நாட்டின் குளிர்பதன கிடங்குகளில் 7-8 லட்சம் மிளகாய் மூட்டைகள் (ஒரு மூட்டை- 45 கிலோ) மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இது, ஒரு மாத பயன்பாட்டிற்கு போதுமானது என்பதால், மிளகாய்கான தேவை அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்றாண்டு, மிளகாய் விலை உச்சத்தில் இருந்ததால், அதன் ஏற்றுமதி குறைந்தது. இந்திய ஏற்றுமதியாளர்கள், சீனாவின் போட்டியை சமாளிக்க முடியாத நிலையில் இருந்தனர்.
சென்ற 2011ம் ஆண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் நாட்டின் மிளகாய் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 24 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 டன்னாக இருந்தது. அதே சமயம், மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்து 1,266 கோடி ரூபாயாக இருந்தது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படாததால், அடுத்த மூன்று மாதங்களுக்கு சர்வதேச மிளகாய் சந்தையின் நிலவரம் குறித்து உறுதியாக கணிக்க முடியாத நிலை உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.மிளகாய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீனாவில், இவ்வாண்டு அதன் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடர்த்தியான நிறத்துடன், காரம் குறைவான சீன மிளகாய்க்கு சர்வதேச அளவில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. அதனால் அதன் விலையும், இந்திய மிளகாயை விட உயர்வாகவே உள்ளது. எனினும், சர்வதேச சந்தையில், இம்மாத இறுதியில் மிளகாய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அதன் விலை குறையும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|