பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:09
நாட்டின் சிமென்ட் விற்பனை, நடப்பு நிதியாண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்
களில், இரட்டை இலக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, சென்ற டிசம்பர் மாதத்தில், சிமென்ட் விற்பனை, 1.98 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 14 சதவீதம் (1.74 கோடி டன்) அதிகமாகும்.
சிமென்ட் பயன்பாடு
நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில், சிமென்ட் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, ஒட்டு மொத்த அளவில் இதன் விற்பனை, அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ், ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், ஸ்ரீ சிமென்ட், ஜே.பி. அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சிமென்ட் விற்பனை, சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் நவம்பர் மாதத்தில், சிமென்ட் விற்பனை, 1.77 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 19.46 சதவீதம் (1.49 கோடி டன்) அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் சிமென்ட் விற்பனை, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தை விட, 5.31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15.16 கோடி டன்னிலிருந்து, 15.97 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் (-0.28 சதவீதம்), மே (-0.23 சதவீதம்), அக்டோபர் (- 2.91 சதவீதம்) ஆகிய மூன்று மாதங்களில், விற்பனை பின்னடைவை கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, மேற்கண்ட மூன்று மாதங்களில், நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 1.80 கோடி டன் சிமென்ட் விற்பனையானது. இது, சென்ற நிதியாண்டின் ஏப்ரலில், 1.81 கோடி டன்னாக இருந்தது. இது, மே மாதத்தில், 1.77 கோடி டன் (1.77 கோடி டன்) மற்றும் அக்டோபர் மாதத்தில், 1.78 கோடி டன் (1.82 கோடி டன்) என்ற அளவில் குறைந்திருந்தது.
விற்பனை வளர்ச்சிநடப்பு நிதியாண்டில் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒட்டு மொத்த அளவில் சிமென்ட் விற்பனை உயர்ந்துள்ளதால், இத்துறை நிறுவனங்களின் நிதி நிலை செயல்பாடு நன்கு இருக்குமென, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
பல ஆய்வாளர்கள், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி, 2010-11ம் நிதியாண்டை ஒட்டியே இருக்குமென முன்பு மதிப்பீடு செய்திருந்தனர்.
ஆனால், தற்போது, இத்துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6-7 சதவீத அளவிற்கே இருக்குமென மறுமதிப்பீடு செய்துள்ளனர்.
ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அலட்ராடெக் சிமென்ட் நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 619 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சந்தை மதிப்பீட்டை விட அதிகமாகும். இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.சி.பிர்லா கூறுகையில்,
"மேற்கு மாநிலங்களில் சிமென்ட் விற்பனை அதிகரித்ததையடுத்து, நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை உயர்ந்துள்ளது' என்றார்.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், நகர்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் சிமென்ட் பயன்பாடும், தேவையும் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. தற்போது, நாட்டின் கிழக்கு மாநிலங்களிலும் சிமென்ட் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் தொடக்கத்தில், நாட்டின் பல பகுதிகளில், 50 கிலோ சிமென்ட் மூட்டை, 280 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இது, இக்காலாண்டின் பிற்பகுதியில், மூட்டைக்கு 15-20 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்திருந்தது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், சிமென்ட் விற்பனை வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது.
சிமென்ட் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாக திகழும் நிலக்கரியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதுடன், சிமென்டிற்கான தேவையிலும் அதிக ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
உற்பத்தி இலக்கு
நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், சிமென்ட் உற்பத்திக்கான இலக்கு எட்டப்பட்டு விட்டது. இக்காலத்தில் இத்துறை நிறுவனங்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு செலவில் கூடுதலாக, 12 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் வகையில், உற்பத்தி திறனை அதிகரித்து கொண்டுள்ளன.அதேசமயம், சிமென்ட் விற்பனை வளர்ச்சி, ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டுமென்ற இந்நிறுவனங்களின் திட்டம் நிறைவேறாமல் போனது. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து, சிமென்ட் துறை நிறுவனங்கள்,தேவைக்கும் அதிகமாக சிமென்டை கூடுதலாக சப்ளை செய்ததே விற்பனை வளர்ச்சி சரிவடைந்ததற்கு காரணம் என இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|