பதிவு செய்த நாள்
25 ஜன2012
00:03
மும்பை: நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி) 7 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மறு மதிப்பீடு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு 2011-12 மற்றும் 2012-13ம் நிதியாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேளாண் துறை, தொழில் துறை, சேவைத் துறை, பொது பணவீக்கம், ரூபாயின் வெளிமதிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி குறித்த மறு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
அது குறித்த விவரங்கள் வருமாறு:
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், சர்வதேச பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் முந்தைய மதிப்பீட்டை விட, பல துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது, 7 சதவீதமாக இருக்குமென மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2012-13ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்குமென மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது, 3.4 சதவீதமாக இருக்குமென மறுமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டை விட (3.2 சதவீதம்) அதிகம்.
அதேசமயம், வரும் 2012-13ம் நிதியாண்டில், இத்துறையின் வளர்ச்சி 3 சதவீதம் என்ற அளவில் இருக்குமென மறுமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 7.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், 2011-12ம் நிதியாண்டில், முதல் மதிப்பீட்டில், 6.4 சதவீதமாக இருக்குமென்றும், மறுமதிப்பீட்டில், 4.1 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வரும் 2012-13ம் நிதியாண்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.
சேவைகள் துறையின் உற்பத்தி வளர்ச்சி,
2010-11ம் நிதியாண்டில், 9.2 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில் 9 சதவீதம் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில், 8.8 சதவீதமாக இருக்கும் என மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பணவீக்கம்
மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம், 9.6 சதவீதமாக இருந்தது. இது, வரும் 2011-12ம் நிதியாண்டில் , 8.8 சதவீதம் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில், 6.5 சதவீதமாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, கடந்த 2010-11ம் நிதியாண்டில், சராசரியாக, 44.60 ரூபாய் என்ற அளவில் இருந்தது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலை உள்ளிட்ட பல காரணங்களால், சென்ற டிசம்பர் மாத இறுதியில், ரூபாய்க்கு எதிரான டாலரின் வெளிமதிப்பு 54 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சராசரியாக 52 ரூபாய் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில் 48 ரூபாய் என்ற அளவில் இருக்குமென ரிசர்வ் வங்கி மறுமதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 37.3 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 17.5 சதவீதம் என்ற அளவிலும், வரும் நிதியாண்டில், இது, 14.3 சதவீதம் என்ற அளவில் இருக்குமென மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி
கடந்த 2010-11ம் நிதியாண்டில், இறக்குமதி 26.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 20.6 சதவீதம் மற்றும் 2012-13ம் நிதியாண்டில், 14.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அதன் மறுமதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|