பதிவு செய்த நாள்
25 ஜன2012
00:08
மும்பை: ரிசர்வ் வங்கி, அதனிடம் வங்கிகள் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வங்கிகளிடம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.
ரிசர்வ் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிதிக் கொள்கை ஆய்வு அறிக்கையை, இவ்வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் வெளியிட்டார்.
அந்த அறிக்கையின் சாராம்சம்;
வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டுகளிலிருந்து, குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும், ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.), 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, வரும் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
ரெப்போ ரேட்
இதனால், வங்கிகள் வசம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். மேலும், இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிச் சந்தையில் கூடுதலாக 1.60 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அது, 8.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும்.
அது போன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து குறுகிய கால அடிப்படையில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) மாற்றம் ஏதுமின்றி 7.5 சதவீதமாகவே இருக்கும்.
கடனுக்கான வட்டி விகிதம் உச்சத்தில் இருப்பதால், நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி), 7 சதவீதமாக இருக்கும். இது, முன்பு 7.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை இந்த மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அரசின் அளவிற்கு அதிகமான செலவினங்கள் தான் முக்கிய காரணம். இது, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த அம்சங்களை மிகுந்த கவனத்துடன், நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும்.
மானியச் செலவு
உடனடி நடவடிக்கையாக, பொருளாதார வளர்சியை கருத்தில் கொண்டு, டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். உணவு மானியச் செலவையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் வரும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் <உறுதுணையாக இருக்கும்என ரிசர்வ் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கான பணவீக்கம் குறைக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ், "பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அவசரப்பட்டு குறைக்க முடியாது' என்றார்.
பணவீக்கம் மேலும் உயரும் பட்சத்தில், அது பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை, தற்போது பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என, சுப்பாராவ் மேலும் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் அவற்றின் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க கூடும் என, ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என, ஒரு சில வங்கிகள் தெரிவித்துள்ளன. வங்கிச் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால், வங்கிகள் தாராளமாக கடன்களை வழங்கும்.
இது, பலதரப்பட்ட தொழில்களின் வளர்ச்சிக்கு துணை புரியும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்ததையடுத்து, 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், இதுவரை வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்) 6 சதவீதமாக இருந்தது.
வங்கிகளுக்கான "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' 2010ம் ஆண்டு மார்ச் முதல்
13 முறை உயர்த்தப்பட்டது. இக்காலகட்டத்தில்,
"ரெப்போ ரேட்' விகிதங்கள் ஒட்டு மொத்த அளவில் 3.75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்த கருத்துக்கள்:
வங்கிகள் வசம் ரூ.32,000 கோடி புழக்கத்திற்கு வரும்.வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை."ரெப்போ ரேட்' விகிதங்களில் மாற்றம் இல்லை.
நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.மானியச் செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர்: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கிகளிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணவீக்கம் உயராமல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இது இருக்கும்.
ரங்கராஜன் (தலைவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு): வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சரியான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவு. வங்கி வட்டி விகிதம் குறையும்.
மான்டெக் சிங் அலுவாலியா (துணைத் தலைவர், மத்திய திட்டக் குழு): மத்திய அரசின் மானியச் செலவினம் குறைக்கப்பட வேண்டும். அப்போது தான், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக அதிகரிக்கும்.ஏ.கே.குப்தா (செயல் இயக்குனர், கனரா வங்கி): வங்கிகளின் வட்டி விகிதம் உடனடியாக குறைய வாய்ப்பில்லை. ஆனாலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே சமயம், வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம் (பி.எல்.ஆர்) உயரும் என்ற அச்சமும் நீங்கியுள்ளது.
எஸ்.சி.சின்கா (செயல் இயக்குனர், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்): சி.ஆர்.ஆர். குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் தாராளமாக கடன்களை வழங்கும். கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.என்.சேஷாத்ரி (செயல் இயக்குனர், பேங்க் ஆப் இந்தியா): சி.ஆர்.ஆர். குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. அதே சமயம், ரெப்போ ரேட் விகிதங்கள் குறைக்கப்படும் நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதம் நிச்சயம் குறையும்.என்.காமகோடி (நிர்வாக இயக்குனர், சிட்டி யூனியன் பேங்க்): வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி 21 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கில், சி.ஆர்.ஆர். விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, "ரெப்போ ரேட்' விகிதங்கள் குறைக்கப்படவில்லை. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|