பதிவு செய்த நாள்
30 ஜன2012
01:26
ஈரோடு:கட்டுமானப் பணிகள் அதிகரித்துள்ளதால், சிமென்ட் பயன்பாடு அதிகரித்து, ஒரே மாதத்தில் மூட்டைக்கு, 50 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது.கடந்த, 2010-2011ல் சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறனில், 78 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, அரசு கட்டுமானத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.
இதன் காரணமாக, சிமென்ட் பயன்பாடு குறைந்து, நிறுவனங்கள், அவற்றின் மொத்த சிமென்ட் உற்பத்தியை குறைத்துக் கொண்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசின் கட்டுமானத் திட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இதன் காரணமாக சிமென்ட் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் சிமென்ட் இருப்பு அதிகம் இருந்ததால், நிறுவனங்கள், நடப்பாண்டில் உற்பத்தியை குறைக்கவுள்ளன.
ஈரோட்டை சேர்ந்த சிமென்ட் ஏஜன்ட் ராஜ்குமார் கூறியதாவது:தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, அரியலூர், சங்ககிரி பகுதியில் சிமென்ட் உற்பத்தி அதிகளவு நடக்கிறது. இங்கிருந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஏஜன்ட்களுக்கு சிமென்ட் அனுப்பப்படுகிறது. சிமென்ட் மொத்த உற்பத்தி திறனில், தென்னிந்திய நிறுவனங்கள் - 65 சதவீதம், வட இந்திய நிறுவனங்கள் - 80 சதவீதம் என, மொத்த உற்பத்தி திறனில் - 70 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்தன.
சென்றாண்டில், நிறுவனங்கள் கூடுதலாக உற்பத்தி செய்து, நிலுவையில் உள்ள சிமென்டை, நடப்பாண்டு சந்தைக்கு விடும் முடிவில் உள்ளன. இதனால், சிமென்ட் உற்பத்தி தற்போது குறைந்துள்ளது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசின் கட்டுமானப் பணிகள் தற்போது ஜரூராக நடந்து வருகிறது. சிமென்ட் பயன்பாடும் அதிகரிக்க துவங்கி உள்ளதால், விலையும் மூட்டைக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இறுதியில் தரத்தின் அடிப்படையில், 230 முதல், 260 ரூபாய் வரை விலை இருந்தது. தற்போது, மூட்டைக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 280 முதல், 310 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|