பதிவு செய்த நாள்
30 ஜன2012
01:31
புதுடில்லி:துரித உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், அதிக அளவில் நுகர்வோரை ஈர்க்கும் சிறிய நகரங்களில், கால் பதிக்க திட்டமிட்டுள்ளன.அமைப்பு சார்ந்த துரித உணவுத் துறையின் சந்தை மதிப்பு 9,000 கோடி ரூபாயாக உள்ளது. இத்துறை, ஆண்டுக்கு 25 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, டோமினோஸ் பிஸா, பிஸா ஹட், கே.எப்.சி, சப்வே போன்ற பல நிறுவனங்கள், சிறிய நகரங்களில் அவற்றின் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன. இந்நகரங்களில், தற்போது, இந்நிறுவனங்களின் வர்த்தகம் 50 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது.இந்தியாவில், டோமினோஸ் பிஸா பிராண்டிற்கு பிரதான தனியுரிமை பெற்றுள்ள ஜுபிலன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம், மகாராஷ்ட்ராவில் ஷீரடி போன்ற சிறிய நகரங்களில் பல உணவகங்களை சிறப்பாக நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்துஇந்நிறுவனம், தமிழகத்தில் மதுரை, கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கோட்டா, கேங்டாக், ஜபல்பூர் உள்ளிட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஓராண்டிற்குள் 75 புதிய உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.கே.எப்.சி., நிறுவனம் கோழி உணவு வகைகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
இதன் மொத்த வருவாயில், 25 சதவீதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கிடைக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்களில் இந்நிறுவனத்தின் சிக்கன் லாலிபப் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு அசைவப் பிரியர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது.இந்நிறுவனம், அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்களில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.சப்வே துரித உணவு நிறுவனம், அமெரிக்காவில் வேரூன்றிய பின்னர், கடந்த 2001ம் ஆண்டு, இந்தியாவில் கால் பதித்தது.
முதன் முதலாக டெல்லியில் உணவகத்தை தொடங்கிய இந்நிறுவனம், பத்து ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது, இந்நிறுவனம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், தனியுரிமை அடிப்படையில், மேலும் பல கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை தயாரித்து வழங்கும் இந்நிறுவனம், பீகார் தலைநகர் பாட்னாவில், அதன் முதல் கிளையை திறந்துள்ளது. நுகர்வோரின் வரவேற்பு காரணமாக, மேலும் பல நகரங்களில் உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.இத்தகைய துரித உணவகங்களின் சிறப்பான வளர்ச்சிக்கு, சுகாதாரமான முறையில் அவை வழங்கும் சுவையான, தரமான உணவுகளே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது அறிமுகப்படுத்தும் புதிய உணவு வகைகளும், வாடிக்கையாளர்களை ஈர்த்து, வர்த்தகத்தை உயர்த்த துணை புரிவதாக உள்ளன என, இத்துறையை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|