பதிவு செய்த நாள்
30 ஜன2012
01:33
புதுடில்லி:நடப்பு ஆண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 50 லட்சம் டன்னாக உயரும் என, சர்வதேச உணவு தானியங்கள் குழு (ஐ.ஜி.சி) மதிப்பிட்டுள்ளது.இரண்டாவது இடம்:உலகளவில், அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற 2011ம் ஆண்டு, இந்தியா 38 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.ஜி.சி மதிப்பீடு செய்துள்ளது.
நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது. அதனால், அரிசி உற்பத்தி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, நாட்டின் அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என ஐ.ஜி.சி., தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தி உயரும் என்பதால், சென்ற 2011ம் ஆண்டு செப்டம்பர் முதல், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஒரு டன் அரிசிக்கான குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை 900 டாலராக நிர்ணயித்தது. இதன் காரணமாகவும், நாட்டின் அரிசி ஏற்றுமதி, உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில், இந்தியா 10.20 கோடி டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை போன்று, பாகிஸ்தானும் நடப்பாண்டு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு, பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதி, 32 சதவீதம் உயர்ந்து 28 லட்சம் டன்னில் இருந்து 37 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நாடு, அரிசி ஏற்றுமதிக்கு குறைந்த பட்ச ஏற்றுமதி விலை எதையும் நிர்ணயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு காலண்டர் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைத் தவிர அமெரிக்கா, தாய்லாந்து, வியட்னாம் நாடுகளின் அரிசி ஏற்றுமதி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து:நடப்பாண்டில், தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதி 1.05 கோடி டன்னில் இருந்து 72 லட்சம் டன்னாக குறையும் என தெரிகிறது. அது போன்று, வியட்னாம் நாட்டின் அரிசி ஏற்றுமதி 71 லட்சம் டன்னில் இருந்து 65 லட்சம் டன்னாகவும், அமெரிக்காவின் அரிசி ஏற்றுமதி 33 லட்சம் டன்னில் இருந்து 31 லட்சம் டன்னாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஐந்து நாடுகள் நீங்கலாக, இதர நாடுகளின் அரிசி ஏற்றுமதி 68 லட்சம் டன்னில் இருந்து 63 லட்சம் டன்னாக குறையும் என, ஐ.ஜி.சி மதிப்பிட்டுள்ளது.
தூரக் கிழக்கு ஆசிய நாடுகளின் அரிசி இறக்குமதி குறைந்துள்ளதால், உலக நாடுகளில் அரிசி ஏற்றுமதி, 3.41 கோடி டன்னில் இருந்து 3.15 கோடி டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில், ஆசியாவில், குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நெல் உற்பத்தி உயரும் என்பதால், சர்வதேச நெல் உற்பத்தி 45.90 கோடி டன்னாக அதிகரிக்கும் என தெரிகிறது.
அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள வியட்னாம், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, சீனா ஆகிய ஐந்து நாடுகளின் அரிசி கையிருப்பு, சாதனை அளவாக 10 சதவீதம் உயர்ந்து 3.19 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, தாய்லாந்து நாடுகளின் அரிசி கையிருப்பு அதிகரித்துள்ளதால் இது சாத்தியமாகும் என, ஐ.ஜி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|