பதிவு செய்த நாள்
30 ஜன2012
12:39
புதுடில்லி: நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. 2000ம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டில் ஒட்டுமொத்த அளவில் சுமார் 22.56 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் உற்பத்தி மேலும் அமோக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவின் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நறுமணப் பொருள்கள் பட்டியலில் மிளகாய், மிளகு, மஞ்சள், சீரகம், தனியா, வனிலா, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பட்டை, ஏலம், இஞ்சி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் இடம் பெறுகின்றன. இவற்றுள் பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாகவும் மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் நறுமணப் பொருள்களுக்கு உலகம் முழுவதுமாக நல்ல வரவேற்பு உள்ளது.
சர்வதேச அளவில் நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் சீனா இரண்டாவது இடத்திலும் (5.85 லட்சம் டன்), இந்தோனேஷியா மூன்றாவது இடத்திலும் (2.61 லட்சம் டன்), பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் (2.08 லட்சம் டன்), நைஜீரியா ஐந்தாவது இடத்திலும் (1.46 லட்சம் டன்), எத்தியோப்பியா ஆறாவது இடத்திலும் (1.11 லட்சம் டன்), மெக்சிகோ ஏழாவது இடத்திலும் (91,755 டன்) உள்ளன. மற்ற நாடுகள் அனைத்துமாக ஆண்டுக்கு 1.05 லட்சம் டன் நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, உலகின் மொத்த நறுமணப் பொருள்கள் உற்பத்தி ஏறக்குறைய 49 லட்சத்து 39 ஆயிரத்து 990 டன் என கணக்கிடப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|