பதிவு செய்த நாள்
31 ஜன2012
10:43
லண்டன் : "சில நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்' என, ஈரான் எண்ணெய் அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்யும், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) குழுவினர் விரும்பினால், அவர்களது ஆய்வு நாட்கள் நீட்டிக்கப்படும் என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள், அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐ.ஏ.இ.ஏ., குழுவினர் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் ஈரான் சென்றனர். அவர்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பு அளிப்பதாக ஈரான் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று எத்தியோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி, ஐ.ஏ.இ.ஏ., குழுவினர் விரும்பினால் அவர்கள் ஆய்வு செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் ருஸ்தம் கசேமி அளித்த பேட்டியில்,"சில நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் நிறுத்தப்படும்' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகள் என அவர் குறிப்பிடவில்லை. கடந்த 23ம் தேதி, ஐரோப்பிய யூனியன், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது. அதன் பின், ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதேநேரம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றை விரைவில் வெள்ளோட்டம் விடப் போவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த விமானம், 5 கிலோ எடையுள்ள வெடிபொருட்களைத் தூக்கிக் கொண்டு, 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா நேற்று அளித்த பேட்டி ஒன்றில்,"அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டால், அதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும்' என எச்சரித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|