பதிவு செய்த நாள்
09 பிப்2012
02:26
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 4 லட்சத்து 25 ஆயிரத்து 274 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3 லட்சத்து 71 ஆயிரத்து 188 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 14.57 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
தனிநபர் செலுத்தும் வருமான வரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தும் வரி ஆகியவை நேரடி வரிகள் பிரிவின் கீழ் வருகின்றன. சேவை வரி, உற்பத்தி வரி, சுங்க வரி உள்ளிட்டவை மறைமுக வரிகள் பிரிவின் கீழ் இடம் பெறுகின்றன.
வருமான வரி:நேரடி வரி வசூலில், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்திய மொத்த வரி, 11.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 55 ஆயிரத்து 514 கோடியிலிருந்து 2 லட்சத்து 85 ஆயிரத்து 837 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, தனி நபர் செலுத்திய வருமான வரி, 1 லட்சத்து 38 ஆயிரத்து 730 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் செலுத்தியதை விட, 20.43 சதவீதம் ( 1 லட்சத்து, 15 ஆயிரத்து, 192 கோடி ரூபாய்) அதிகமாகும்.
மத்திய அரசு, நடப்பு 2011-12ம் நிதியாண்டு பட்ஜெட்டில், நேரடி வரிகள் வாயிலாக, 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 5 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், பணவீக்க உயர்வு, பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை, வட்டி விகிதம் அதிகரிப்பு, தொழில் துறை உற்பத்தியில் சுணக்க நிலை போன்றவற்றால், நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்திருந்த நேரடி வரி வசூல், இலக்கை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், நேரடி வரி வசூல் மறுமதிப்பீட்டு அளவான, 5 லட்சத்து, 85 ஆயிரம் கோடி ரூபாயை எட்டுவது மிகவும் கடினம் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செலவினம்:இது தவிர, அதிகரித்து வரும் மத்திய அரசின் செலவினம் மற்றும் மானியச் சுமை போன்றவையும், அதிக இடர்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நேரடி வரி வசூல் பிரிவின் கீழ் வரும், செல்வ வரி வசூல், 45.11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 470 கோடியிலிருந்து, 682 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், பங்கு வர்த்தகம் வாயிலாக கிடைக்கும் பங்கு பரிவர்த்தனை வரி, 27.19 சதவீதம் சரிவைச் சந்தித்து, 5,693 கோடி ரூபாயிலிருந்து, 4,415 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக குறையும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில், 8.4 சதவீதமாக அதிகரித்து காணப் பட்டது.
தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிதியமைச்சர்: நடப்பு நிதியாண்டில் மானியச் சுமை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உரம்,பொது விநியோக திட்டம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கான மானியச் செலவு அதிகரித்துள்ளது. இதனால், மத்திய அரசின் மானியச் செலவு, பட்ஜெட் மதிப்பீட்டை விஞ்சி, 1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக் கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 4.6 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியாததாலும், வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தாலும், நிதிப்பற்றாக்குறை 5.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் மானியச் சுமை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருவது, மிகவும் கவலையளிப்பதாகவும், இரவு முழுவதும் தம்மை தூங்க விடாமல் அலைக்கழிப்பதாக நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|