பதிவு செய்த நாள்
13 பிப்2012
04:48
சிவகாசி : சிவகாசியில் தொடரும் மின்தடையால், பாடப் புத்தகங்கள் அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, தினமும் 3 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. சிவகாசியில் பிரிண்டிங் தொழிலில், 600க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்படுகின்றன. இத் தொழிலில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இங்குள்ள 40 அச்சகங்களில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தேவையான பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியும் நடைபெறுகிறது. சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடுவதில் ஏற்பட்ட நெருக்கடியால், வரும் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் ஆர்டர்கள், தாமதமாகக் கிடைத்து வருகின்றன.
ஆர்டர் பெற்ற 30 முதல் 35 நாட்களுக்குள் அச்சிடுதல், பைண்டிங் பணி முடித்து, உரிய நாளில் ஒப்படைக்க வேண்டும். குறிப்பிட்டபடி பணி முடிக்காவிட்டால், அச்சக உரிமையாளரிடம் தினம் அபராதம் வசூலிக்கப்படும்.
தற்போது, சிவகாசியில் காலையில் இருந்தே மின் தடை தொடர்கிறது. காலை 9 -12 , பிற்பகல் 2-4 மணி, மாலை 6 - 7.30 , இரவு 8.30- 9.30 மணி என , தினம் எட்டு மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால், அச்சுத் தொழில் முடங்கி உள்ளது .
குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களால் தான், ஜெனரேட்டரைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்ய முடிகிறது. மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 செலவு என்றால், ஜெனரேட்டரை பயன்படுத்தி உற்பத்தி செய்தால், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.12 செலவாகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், 120 மடங்கு கூடுதல் செலவாகிறது.
பெரிய நிறுவனங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி பிரிண்டிங் செய்து, முடித்தால், இதர பணிகளான லேமினேசன், பிளேட் மேக்கிங், ஸ்கொயரிங் போன்ற பணிகளுக்கு, வெளியில் கொண்டு செல்லும்போது, மின்தடையால் பணியை முடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 8 மணிநேர மின்தடையால், சிவகாசியில் தினம் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள் வேலை இழப்பும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|