பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:48
புதுடில்லி:நடப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில், வளரும் நாடுகளின் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (ஈ.எம்.ஈ.எப்) 580 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், நடப்பாண்டில், பிப்ரவரி 8ம் தேதி வரையிலான காலத்தில், இவ்வகை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 1,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த 68 வாரங்களில் இல்லாத அளவிற்கு, மதிப்பீட்டு வாரத்தில், ஈ.எம்.ஈ.எப் - திட்டங்களில் அதிக அளவில் முதலீடு குவிந்துள்ளது. தொடர்ந்து ஆறு வாரங்களாக, இத்திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக ஆய்வு நிறுவனமான ஈ.பி.எப்.ஆர் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், சர்வதேச நாடுகளில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதித் திட்டங்களில் (குளோபல் ஈக்யுட்டி பண்ட்ஸ்)983 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய 44 வாரங்களில் இல்லாத அதிகபட்ச முதலீடாகும்.
இதே காலத்தில், பிரிக் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) பங்குச் சந்தைகளிலும், பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில், கடந்த 2009ம் ஆண்டிற்குப் பிறகு அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெரும்பாலான இவ்வகை பரஸ்பர நிதித் திட்டங்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் பிரிவின் கீழ் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றன.பிப்ரவரி 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் 155 கோடி டாலர் அளவிற்கு நிகர முதலீடு செய்துள்ளதாக 'செபி' தெரிவித்துள்ளது.
இதே காலத்தில், சீன பங்குச் சந்தையிலும் 34 கோடி டாலர் அளவிற்கு அன்னிய பரஸ்பர நிதி நிறுவனங்கள்,பங்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன.விளைபொருள் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில், மதிப்பீட்டு காலத்தில், மிக அதிக அளவாக 94 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தங்கம் உள்ளிட்ட மதிப்புமிகு உலோகங்களின் பங்களிப்பு 49.5 கோடி டாலராக உள்ளது.அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி காணப்படுகிறது. மேலும் இந்தியா, சீனா, பிரேசில் நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பிற நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தி வருவதாலும், அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|