பதிவு செய்த நாள்
16 பிப்2012
02:59
புதுடில்லி:நடப்பு சந்தைப்படுத்தும் (ஜூலை-ஜூன்) பருவத்தில், மத்திய, மாநில அரசுகளின் முகமை அமைப்புகளின் நெல் கொள்முதல் 13 சதவீதம் உயர்ந்து, 2.34 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இந்திய உணவு கழகம்:சென்ற ஆண்டின், இதே காலத்தில், 2.07 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ) மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள், விவசாயிகளிடம் இருந்து நெல் உள்ளிட்ட உணவு தானியங்களை, அரசு நிர்ணயிக்கும் விலையில் கொள்முதல் செய்கின்றன. இந்த உணவு தானியங்கள், பொது வினியோக திட்டத்தின் கீழ், மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
பஞ்சாப் மாநிலம்:இந்த வகையில், முகமை அமைப்புகளின் நெல் கொள்முதல், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தின் பங்களிப்பு 77 லட்சம் டன்னாக உள்ளது. இது, சென்ற பருவத்தில் 86 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.
எனினும், அரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், சென்ற ஆண்டை விட அதிகளவில், மத்திய தொகுப்பிற்கு நெல்லை வழங்கியுள்ளன.சத்தீஸ்கர், 36 லட்சம் டன் நெல்லை வழங்கியுள்ளது. இது, சென்ற ஆண்டை விட அதிகம்.
இதே காலத்தில், அரியானாவின் நெல் அளிப்பு 16 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ஆந்திராவின் நெல் அளிப்பு 26 லட்சம் டன்னில் இருந்து 33 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இருந்து மத்திய, மாநில முகமை அமைப்புகள் 20 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன.
ஒடிசா, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்ற ஆண்டை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்திய உணவுக் கழகம், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், ஒரு குவிண்டால் சாதாரண நெல் 1,000 ரூபாய் வீதம் கொள்முதல் செய்கிறது. ஒரு குவிண்டால் உயர் ரக நெல், 1,030 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கிடங்கு வசதி:நாட்டில் போதுமான அளவிற்கு கிடங்கு வசதிகள் இல்லாததால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகின்றன. இதைத் தடுக்கும் விதத்தில், அதிகளவில் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்காக கிடங்கு வசதிகளை அமைக்கும் படி மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது, மேற்கண்ட மாநிலங்களில், பொது வினியோக திட்டத்திற்காக, உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் முகமை அமைப்புகள் இல்லாத நிலை உள்ளது. இம்மாநிலங்கள், பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வழங்குவதற்கு, இந்திய உணவு கழகத்தையே சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் உணவு தானிய உற்பத்தி பிரதமர் பெருமிதம்:ஜனாதிபதி மாளிகையில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான பயிலரங்கில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:வேளாண் துறை வளர்ச்சிக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக, நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்) உணவு தானிய உற்பத்தி, இலக்கை விஞ்சி, 5 லட்சம் டன் அதிகரித்து, சாதனை அளவாக 25 கோடி டன்னாக உயரும். பருத்தி உற்பத்தியும், 3.40 கோடி பொதிகளாக அதிகரித்து சாதனை படைக்கும்.
நம் விவசாயிகள், இந்த ஆண்டும் நம்மை பெருமை கொள்ளச் செய்துள்ளனர். ஆனால், நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. உணவு தானிய உற்பத்தி, மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.வேளாண் பொருட்களின் பண்ணை விலைக்கும், சில்லரை விற்பனையில் நுகர்வோர் வாங்கும் விலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அறுவடைக்கு பின் விலை குறைந்து, ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், தொடர் வினியோக திட்ட முதலீடுகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சந்தைப் போக்குவரத்தில், குறிப்பாக, அழுகும் பொருட்களின் போக்குவரத்து மற்றும் வேளாண் துறை ஆய்வுகளுக்கு தனியார் முதலீடுகள் அவசியமாகும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|