பதிவு செய்த நாள்
17 பிப்2012
00:10
மும்பை: ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை நிறுவி, செயல்பாடுகளை மேற்கொள்ள, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்க உள்ளது.சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாட்டில் ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, வங்கி சாரா நிறுவனங்களுக்கும், பிரத்யேகமான "வைட் லேபிள் ஏ.டி.எம்.,' (டபிள்யூ.எல்.ஏ) மையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான வழிகாட்டு வரைவறிக்கையை, ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது.அந்த அறிக்கையில், குறைந்தபட்சம், 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே, டபிள்யூ.எல்.ஏ ஏ.டி.எம்.,களை திறக்கவும், அவற்றை பராமரித்து செயல்படுத்திக் கொள்ளவும், ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு அனுமதி பெறும் நிறுவனம், ஒரு ஸ்பான்சர் வங்கியை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். டபிள்யூ.எல்.ஏ-வில் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கான தொகையை, ஸ்பான்சர் வங்கி வழங்க வேண்டும்.இந்த வங்கி, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட, அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்., செயல்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருக்க வேண்டும்.ஒரு வங்கியின் வாடிக்கையாளர், மாதத்திற்கு 5 முறை வெளி வங்கிகளின் ஏ.டி.எம்., களில் இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி தற்போது உள்ளது. இது, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்.,களுக்கு பொருந்தாது. வங்கி வாடிக்கையாளர், டபிள்யூ.எல்.ஏ ஏ.டி.எம்.,களை பயன்படுத்துவதற்கு முன்பாக, பரிவர்த்தனை கட்டண விவரங்களை ஏ.டி.எம்., திரை வாயிலாக தெரிவிக்க வேண்டும்.ஏ.டி.எம்., பரிவர்த்தனை தொடர்பான வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்கும் வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். பிரச்னைகளை சுமுகமாக தீர்க்க, ஸ்பான்சர் வங்கி துணை புரியும்.தற்போது வங்கி ஏ.டி.எம்.,களில் பணப்பரிவர்த்தனை தொடர்பான புகார்களை தீர்க்க, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, டபிள்யூ. எல்.ஏ. ஏ.டி.எம்.,களுக்கும் பொருந்தும்.டபிள்யூ.எல்.ஏ. ஏ.டி.எம்.,களை விருப்பமான இடத்தில் வங்கி சாரா நிறுவனங்கள் அமைத்துக் கொள்ளலாம். எனினும், இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கு மற்றும் பெருநகரங்கள், சிற்றூர்கள் இடையிலான விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|