பதிவு செய்த நாள்
25 பிப்2012
01:56
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்களில், 46.70 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 0.24 சதவீதம் (46.82 கோடி டன்) குறைவு என, இந்திய துறைமுகங்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கட்டாவில், இரண்டு துறைமுகங்கள், தமிழகத்தில் மூன்று துறைமுகங்கள் என நாட்டில், ஒட்டு மொத்த அளவில், 13பெரிய துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவையனைத்தும், மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவைதவிர, குஜராத் (40), மகாராஷ்டிரா ( 53), தமிழகம் (15), ஆந்திரா (12 ) ஆகிய மாநிலங்களில் ஏராளமான சிறிய துறைமுகங்களும் உள்ளன.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், உலகின் பல நாடுகளின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள துறைமுகங்களில் கையாளப்படும் சரக்குகள் சிறப்பான அளவில் அதிகரிக்கவில்லை. தற்போது, பல நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. எனவே, இனி வரும் மாதங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணூர் துறைமுகம்:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், எண்ணூர் துறைமுகத்தில், 1.20 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 43.94 சதவீதம் (83 லட்சம் டன்) அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 13.78 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2 கோடி டன்னிலிருந்து, 2.29 கோடி டன்னாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, 7.43 சதவீதம் சரிவடைந்து, 5 கோடி டன்னிலிருந்து, 4.70 கோடி டன்னாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், கோல்கட்டாவில் உள்ள இரண்டு துறைமுகங்களும் கையாண்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. இதில், கோல்கட்டா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு 3.72 சதவீதம் சரிவடைந்து, 1.06 கோடி டன்னிலிருந்து, 1 கோடி டன்னாக குறைந்துள்ளது.
ஹால்டியா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 8.39 சதவீதம் குறைந்து, 2.89 கோடி டன்னிலிருந்து, 2.64 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. மொத்தத்தில், இவ்விரு துறைமுகங்களும் கையாண்ட சரக்குகளின் அளவு, 7.14 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.95 கோடி டன்னிலிருந்து, 3.67 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
பரதீப் துறைமுகம்:இவைதவிர, பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 1.26 சதவீதம் சரிவடைந்து, 4.61 கோடி டன்னிலிருந்து, 4.55 கோடி டன்னாக குறைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில், கையாண்ட சரக்குகளின் அளவு, 4.01 சதவீதம் அதிகரித்து, 5.57 கோடி டன்னிலிருந்து, 5.79 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கொச்சி துறைமுகம்:அதே நேரத்தில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 13.44 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1.47 கோடி டன்னிலிருந்து, 1.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு 3.44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.60 கோடி டன்னிலிருந்து, 2.64 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஜவகர்லால் நேரு துறைமுகம் (ஜே.என்.பி.டி.) கையாண்ட சரக்குகளின் அளவு, 2.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.80 கோடி டன்னிலிருந்து, 4.95 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், மர்ம கோவா துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 17.53 சதவீதம் சரிவடைந்து, 3.87 கோடி டன்னிலிருந்து, 3.19 கோடி டன்னாக குறைந்துள்ளது. மும்பை துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, 0.95 சதவீதம் குறைந்து, 4.55 கோடி டன்னிலிருந்து, 4.51 கோடி டன்னாக குறைந்துள்ளது. கன்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவும், 0.28 சதவீதம் குறைந்து, 6.87 கோடி டன்னிலிருந்து, 6.85 கோடி டன்னாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|